"விஸ்வரூபம்".. அமித்ஷா "அந்த" பாயிண்ட்டை ஸ்ட்டிராங்கா சொன்னாராமே.. எகிறியடிக்கும் பாஜக..பெரிய சான்ஸ்
பாமக நடக்கப்போகும் இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது
சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியை தாண்டி, இரண்டு கட்சிகள் முக்கிய கவனத்தை பெற்றுள்ளன.. அதில், ஒன்று பாஜக, மற்றொன்று பாமக ஆகும்.
அதிமுக கூட்டணியில்தான் இப்போதும் இருக்கிறோம் என்று தமிழக பாஜக சொல்லி வந்தாலும், இரு தரப்பிலும் இணக்கமான சூழல் இப்போதைக்கு நிலவவில்லை என்றே தெரிகிறது.. பூசலும் விரிவடைந்து வருகிறது.
தமாகாவுக்கே கூட்டணியில் தொகுதியை விட்டுத்தருவதாக செய்திகள் வலம்வந்தாலும், அதிமுக - தமாகா இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது...
ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாக போட்டி? ஜிகேவாசனுடன், அதிமுக தலைவர்கள் திடீர் சந்திப்பு.. ட்விஸ்ட்!
வியூகம் 1
ஏற்கெனவே உட்கட்சி பூசலில் அதிமுக சிக்கிவரும் நிலையில், தேர்தலை சந்திக்கும் நிலையில் அக்கட்சி இப்போதைக்கு இல்லை என்கிறார்கள் ஒருசாரார். அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக நேரடியாகவே களமிறங்குவதுடன், அண்ணாமலையையே வேட்பாளராக நிறுத்த பாஜகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.. நடக்க போகும் இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழக அமைச்சர்கள் சிலரின் ஊழல்கள், தமிழகத்தில் தான் மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரை திட்டம் குறித்து அண்ணாமலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்கினாராம்..
வியூகம் 2
அனைத்தையும் கேட்டுக்கொண்ட அமித் ஷா, தமிழகத்தில் ஆளுநராக ரவியே நீடிப்பார் என்ற உறுதியை அப்போது தெரிவித்ததாக சொல்கிறார்கள். மேலும், அண்ணாமலையை நிறுத்தி வெற்றிபெறச் செய்து தமிழக சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டுமென மூத்த நிர்வாகிகளும் தன்னிடம் தெரிவித்ததாக அமித் ஷா அப்போது சொன்னாராம்.. அந்தவகையில், இடைத்தேர்தலில் பாஜக களமிறங்க நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதுதொடர்பாக அதிமுக தலைமையிடமும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்..
டேமேஜ்
ஒருவேளை பாஜக இங்கு தனித்து களமிறங்கினால், நிச்சயம் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளும் என்கிறார்கள். ஏற்கனவே திமுக அரசை விடாமல் விமர்சித்து வரும்நிலையில், கிடைக்கும் சான்ஸை விட்டுவிடாமல், ஆளும் தரப்பை டேமேஜ் செய்யாமல் பாஜக விடாது என்றும் சொல்கிறார்கள். அதேபோல, பாமகவை எடுத்துக் கொண்டால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.. எனவே, பாமக என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்று தெரியவில்லை..
பாமக ஆர்வம்
ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த தொகுதியில் பாமகவுக்கு பெரிய அளவில் ஓட்டு சதவீதம் இல்லை என்கிறார்கள்.. கடந்த 2016-ல் தனித்து போட்டியிட்டபோது, 1.43 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது.. ஆனால், இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக ஆர்வம் காட்டி வருகிறது.. ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. இப்போதைக்கு அதுதான் மெகா கூட்டணி போல தெரிகிறது..
நடுநிலைமையா?
எனவே, பாமக கேட்கும் தொகுதிகளை திமுக தருமா? என்பதைவிட, பாமக கூட்டணிக்குள் வருவதை அங்குள்ள விசிக உள்ளிட்ட கட்சிகளே விரும்பாத நிலையில், திமுக அமைதி காத்து வருகிறது. அந்தவகையில், திமுக, அதிமுக எந்த பக்கம் கூட்டணி என்பதில் பாமக யோசித்து வருகிறது.. அதனால்தான், 2024 எம்பி தேர்தலில் பாமகவுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடுக்கும் முடிவுகள் அமைய வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம்.. அநேகமாக, யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கலாமா? என்றுகூட ஆலோசித்து வருகிறார்களாம்..!!