பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
சென்னை: பரங்கிமலை டூ வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும் என்பதை சென்னைவாசிகள் சரியாக கணித்தால் அவர்களுக்கு இதுதான் லைஃப் டைம் செட்டில்மெண்ட் தீர்வாக இருக்கும். சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வேளச்சேரியை சுற்றி உள்ள நிலையில், மொத்த சென்னைக்கும் இந்த பாதை இணைப்பு மிக முக்கியமாகும்.
பரங்கிமலை- வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை குறித்து தமிழக அரசியல் கட்சிகள் இதுவரை அழுத்தம் தராமல் இருப்பது ஆச்சர்யமான விஷயம் ஆகும். காரணம்.. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையில் ஒரு பாதி மக்கள் எளிதாக இன்னொரு பாதிக்கு குறைந்த செலவில் போய்விட முடியும்.. சென்னையில் மெட்ரோ ரயில் பாதைகளைவிட மிக முக்கியமான பாதை என்றால் பரங்கிமலை வேளச்சேரி இணைப்பு தான்.

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பாதையில் பறக்கும் ரயில்கள் ஓடி வந்த நிலையில் தற்போது எழும்பூர் முதல் கடற்கரை வரை 4வதுபாதைக்காக சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயங்குகின்றன. இதுவே சென்னைவாசிகளுக்கு பெரிய அசவுகரியத்தை கொடுத்து வருகிறது. இதுஒருபுறம் எனில், வேளச்சேரி பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் பணிகள் எப்போது முடியும் என்றே இன்று வரை தெரியவில்லை..
வரலாறு என்ன? சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்த ரயில்வே துறை, , வேளச்சேரி-பரங்கிமலை இடையே உள்ள 5 கி.மீ. துாரத்தை இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை திட்டப் பணிகள் கடந்த 2010 முதல் ஆரம்பம் ஆனது. ரூ.734 கோடி செலவில் 14 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணிகள் ஓரளவு முடிந்துவிட்டன.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் காரணமாக தாமதம் ஆனது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன.
அதேநேரம் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையில் துாண்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 50 மீட்டர் நீளத்தில், 3.1 மீட்டர் உயரம் கொண்ட ஆறு இரும்பு தூண்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.. இதனிடையே தில்லை கங்கா நகர் அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரியில் உடைந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதால் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டன.
பாலத்தின் ஒரு பகுதி 3 அடி ஆழத்துக்கு சாலையில் புதைந்தது. இந்த மேம்பாலத்தை தாங்குவதற்காக தூணில் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டிருந்தது. இருந்தும் பாலம் உடைந்தது. இதனிடையே பாலம் விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய, ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருக்கிறது அவர்கள் ஆய்வு செய்து, அறிக்கையை சமர்ப்பித்தார்கள், இந்நிலையில், உடைந்த பாலத்தை அகற்றும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
தற்போதைய நிலையில் பரங்கிமலை டூ வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை முடிவுக்கு வராது என்றே சொல்கிறார்கள்.. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை பணிகள் எப்போது முடியும் என்று ரயில்வே இதுவரை அறிவிக்கவில்லை.. தமிழக அரசு இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிகள் விரைந்து முடியும் என்ற நிலை இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications