தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ 1000 எப்போது? 2023 பட்ஜெட் வரை பொறுங்க.. அமைச்சர் பிடிஆர்
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தமிழக பெண்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸாகவே தெரிகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்தோமேயானால் அதில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைப்பது, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா கால நிவாரணம் ரூ 4000, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு ரூ 100 மானியம், நகைக் கடன் தள்ளுபடி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றில் மிக முக்கியமானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவதாகும். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இன்னும் இந்த திட்டத்தை திமுக தொடங்கவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை எல்லாம் காற்றில் எழுதப்பட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதற்கு அரசு கஜானாவில் பணம் இல்லை என்றும் நிதி நிலை சரியில்லை என்றும் தமிழக அரசு கூறியது. மேலும் நிதிநிலை சரியானதும் இந்த திட்டம் நிச்சயம் தொடங்கப்படும் என்றும் திமுக சொன்னதை செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்திலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அல்லது அதற்கு கீழ் அடகு வைத்துள்ள நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்த நிலையில் எல்லாருக்கும் இந்த திட்டம் இல்லை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் கூறிவிட்டனர். இதுவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
ஒவ்வொரு முறையும் அதிமுகவும் பாஜகவும் தமிழக அரசை விமர்சிக்கும் போது இந்த ரூ 1000 திட்டத்தை பற்றி பேசாத நாளே இல்லை எனலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என தெரிந்தே திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டதாகவும் கருத்துகள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். மார்ச் மாதம் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த நேரத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications