வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?..தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யுமா?
சென்னை: வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. அக்டோபர் வரை நீடித்தது. அபரிமிதமான அளவு பருவமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை விலகியதுமே தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு 23ஆம் தேதி தென்மேற்கு பருவமழை விலகினாலும், தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்று வீசும் திசை மாறியது. அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். அதே போல இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழை தொடங்கும் நாள் தள்ளிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அக்டோபர் 25ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அதிக அளவி்ல் தமிழகத்துக்கு மழை கிடைத்தது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்திலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அக்டோபர் 21, அல்லது 22ம் தேதிகளில் தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது உள்ள வானிலை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த மாதம் இறுதிக்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 20ம் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் இறுதிக்குள் மழை தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1915ம் ஆண்டில் நவம்பர் 11ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிதமான மழை
இன்றைய தினம் தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3 நாட்களுக்கு மழை
நாளை, நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

வடகிழக்கு பருவமழை எப்படி?
நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை 88 சதவிகிதம் 112 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications