குழு அமைத்து 2 வாரங்கள் முடிந்தது.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் எப்போது? ராமதாஸ் கேள்வி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர் வெளியிட்டிருந்த அரசாணையில், இந்த ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆராயும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு, ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், நிதி இழப்புகள், இணையவழி பணபரிவர்த்தனையை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 விவகாரங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழுவுக்கு அளிக்கப்பட்ட இருவார அவகாசம் நிறைவடைந்துவிட்டது. இருந்தும், அக்குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
ஆன்லைன் சூதாட்டத்தின் தீய விளைவுகளும், அதை தடை செய்ய வேண்டியதன் தேவைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை தான். தடை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் புதிய தற்கொலைகள் நிகழக்கூடும். வல்லுநர் குழு அமைக்கப்பட்ட பிறகு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.
Recommended Video
எனவே, வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெறுவதில் எந்த தாமதமும் செய்யக்கூடாது. உடனடியாக குழுவின் அறிக்கையைப் பெற்று நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications