பழைய பென்ஷன் திட்டம்.. சில நாட்களில் வெளியாகும் பரிந்துரை? தமிழ்நாட்டில் எப்போ அமலுக்கு வரும்?
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த இந்த வருட இறுதியில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
இதற்கான ஆலோசனைக் குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுவின் பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டம் - அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பல்வேறு சலுகைகள் மற்றும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்து அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போதைய ஆட்சியில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. இதனால் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்கு சென்றதே இதற்கு சான்று. எனவே, அரசு ஊழியர்களின் மனதை குளிரச் செய்யும் விதமாக பழைய ஓய்வூதியத் திட்டம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நிதியமைச்சரின் பதில்
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் பழைய ஓய்வூதிய திட்டமும் ஒன்று. தற்போது இந்த திட்டம் அமலுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
மாநில அரசுப் பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய அரசு குழு அமைத்துள்ளது.
மாநில அரசின் நிதி நிலையையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத் தக்க ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications