இதுதான் ஸ்டாலின்.. வித்தியாசமான அரசியல்.. புரியாத புதிரின் பின்னணி
சென்னை: இதுதான் ஸ்டாலின்.. என்னதான் மத்தியில் ஆளும் பாஜகவுடன் பல்வேறு விவகாரங்களில் பிரச்சனை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதாகட்டும், அவருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகட்டும் சரியாக செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வோ, பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சியை இன்று புறக்கணித்தே விட்டார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவிற்கும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கும் பல ஆண்டுகளாக சிந்தாந்த ரீதியாகவும், கொள்கை மற்றும் கூட்டணி ரீதியாகவும் முரண்பாடு உள்ளது.

நெருக்கடி
அதேபோல் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக ஆதரிப்பதுடன், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என தேசிய அரசியலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் புதிய முயற்சியிலும் தீவிரமாக இறங்கி உள்ளார். அதேநேரம் திமுகவிற்கு எதிராக பாஜக கடுமையான அரசியலை தமிழ்நாட்டில் செய்து வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவிற்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். மத்தியில் உள்ள பாஜக தலைவர்களுமே திமுகவிற்கு எதிராக கடுமையான அரசியலை முன்வைத்து வருகிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியும் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திமுக அரசிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
எத்தனை சண்டைகள்
இந்நிலையில் என்னதான் பிரச்சனைகள் என்றாலும், முதல்வர் ஸ்டாலின், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுடன் பல விஷயங்களில் சுமூகமான போக்கையே கடைபிடிப்பதாக பார்க்கப்படுகிறது. அரசியல் வேறு, ஆட்சி வேறு என்பதில் கவனமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்களுடன் பல்வேறு திட்டங்களை கேட்டு நாடாளுமன்றத்தில் சண்டைகள் போட்டாலும், தமிழகம் வரும் போது மத்திய அமைச்சர்களுடன் திமுகவினர் மேடைகளில் பங்கேற்கிறாரகள்.

ஏன் முதல்வர் ஸ்டாலினே எந்த மத்திய அமைச்சர் தமிழகம் வந்தாலும் வரவேற்று அவர்களுடன் பேசி வருகிறார். மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கும் எல்லா விழாக்களிலும் முதல்வர் ஸ்டாலினே பலமுறை பங்கேற்றுள்ளார். இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு ஆண்டுகளில் (ஸ்டாலின் முதல்வரான பின்னர்) பலமுறை சென்னை மற்றும் தமிழ்நாடு வந்திருக்கிறார்.
மோடிக்கு வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வரும் போதெல்லாம் அவரை நேரில் சென்று வரவேற்பது,அவருக்கான பாதுகாப்பில் மிக கவனமாக இருப்பது,கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தால் அவர்களை கைது செய்து பிரச்சனை ஏற்படாமல் சரிசெய்வது என முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியை வைத்து தமிழகத்தின் பல்வறு அரசு நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பல நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இன்றும் பங்கேற்க உள்ளார். நாளை முதுமலைக்கு சென்று பிரதமர் மோடியை ஸ்டாலின் வரவேற்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுமூகமான போக்கு
ஒரு பக்கம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், இன்று தெலுங்கனாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ இதுவரை பிரதமர் மோடியின் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணித்தது இல்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக உடன் பல பிரச்சனை இருந்தாலும் சுமூகமான போக்கையே கடைபிடிப்பதாகவே கூறப்படுகிறது. தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மட்டுமின்றி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலோ, ஸ்டாலின் அளவுக்கு பிரதமர் மோடியுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவில்லை என்றே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications