ஸ்டாலின் அரசின் 35 தொழில் ஒப்பந்தங்கள்.. எந்த பகுதியில் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகும்? முழு விவரம்
சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று நடத்திய முதலீட்டாளர் சந்திப்பின்போது 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த திட்டங்களின் மதிப்பு ரூ .17,141 கோடி. 55,054 பேருக்கு வேலை வாய்ப்புகளை இந்த திட்டம் வழங்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் ரூ .4,250 கோடி முதலீட்டிலான, 21,630 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும், 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இது தவிர, ரூ .7,117 கோடியிலான முதலீட்டு திட்டங்கள் மற்றும் 6,798 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஐந்து திட்டங்களையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

ஒற்றை சாளரம்
24 துறைகளில் 100 க்கும் மேற்பட்ட சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, தற்போதுள்ள மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையிலான, ஒற்றை சாளர போர்டல் 2.0 ஐயும், ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

சென்னையில் 5000 வேலை வாய்ப்புகள்
இன்று கையெழுத்தான சில முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் இவைதான்: JSW Renew Energy Two Limited ரூ .3,000 கோடி மதிப்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் திருப்பூரில் ஆலைகளை அமைப்பதால், 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஜெர்மானிய நிறுவனமான இசட் எஃப் வாப்கோ ரூ .1,800 கோடிக்கு, சென்னை ஒரகடம் சிப்காட் வளாகத்தில் முதலீடு செய்கிறது. இதனால், 5000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

டிசிஎஸ் நிறுவனம் விரிவாக்கம்
சிங்கப்பூர் நிறுவனமான கேபிடா லேண்ட் ரூ .1,200 கோடிக்கு, அம்பத்தூரில் செய்யும் முதலீட்டால், 100 வேலைவாய்ப்புகள் உருவாகும். ஸ்ரீவாரு மோட்டார்ஸ் ரூ .1000 கோடிக்கு, கோயம்புத்தூரில் முதலீடு செய்வதால், 4,500 வேலைவாய்ப்புகள் உருவாகும். டி.சி.எஸ் கட்டம் 3 விரிவாக்கப் பணிகளை ரூ .900 கோடி முதலீட்டில், சிறுசேரி ஐடி பூங்காவில் செய்ய உள்ளது. இதனால், 15,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

புதிய முதலீடுகள்
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "நாங்கள் தமிழகத்தில் தொழில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பல தொழில்துறை நிறுவனங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் சுமார் 82,400 வேலைகள் வழங்கப்படும் வகையில் பெரும் முதலீடுகளை எதிர்பார்க்கிறோம். " என்று தெரிவித்தார்.

தென் மாவட்டங்கள் நிலைமை
இன்றைய ஒப்பந்தங்களால் பெருமளவுக்கு சென்னை மற்றும் கோவைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே மக்கள் தொகை பெருக்கத்தால் வீங்கிப்போயுள்ள நிலையில் உள்ள இங்கு மீண்டும் மீண்டும் மக்கள் குவிவதால் அந்த மாவட்ட மக்களுக்கும் கூடுதல் நெருக்கடிதான் ஏற்படும். அதேநேரம், தொழில் வளர்ச்சி இல்லாமல் தவிக்கும் தென் மாவட்டங்களுக்கு இன்றைய ஒப்பந்தத்தில் பெரிய அளவுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications