முதலமைச்சருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தும்... மருத்துவ அறிக்கை வெளியிட தவறிய மருத்துவமனை..!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில் இதுவரை அது தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியிடப்படாதது விவாதத்தை எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹெர்னியா பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மாலை ஹெர்னியா அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனது இல்லம் திரும்பியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவமனையில் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவர் வீட்டிலிருந்தே ஓய்வெடுக்கும் திட்டத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.
இதனிடையே முதலமைச்சராக இருப்பவர் ஒரு நாள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கும் சூழலில், அது தொடர்பான மருத்துவ அறிக்கையை அந்த மருத்துவமனை வெளியிடாதது விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
முக்கியப் பிரமுகர்கள் யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடுவது தான் மருத்துவமனை நிர்வாகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் விவகாரத்தில் இது எப்படி தவறவிடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஹெர்னியா அறுவைச் சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டு, பிறகு தேர்தலுக்காக தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications