தமிழகத்தில் "பெஸ்ட்" ரயில் இதுதான்! கோவைக்கு பெருமை.. இந்த லிஸ்டை பாருங்க! யாருமே எதிர்பார்க்கல
சென்னை: தமிழ்நாட்டில் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்த ரூட்டில் இருப்பதிலேயே அதிக பயணிகள் பயணித்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கே பொது போக்குவரத்து மிகவும் வலுவாக இருக்கிறது. இதனால் நெடுந்தூர பயணங்களுக்குப் பொதுமக்கள் பொது போக்குவரத்தையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் பேருந்தைக் காட்டிலும் அதிக மக்கள் ரயில்களில் பயணிக்கவே விரும்புவார்கள். டிக்கெட் விலை குறைவு, டாய்லெட் போன்ற வசதிகள் இருப்பது எனப் பல காரணங்களால் பொதுமக்கள் இந்த நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்களையே விரும்புகின்றனர்.

ரயில்கள்: விடுமுறை நாட்களில் பல வாரங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடுவது இதற்கு மிக சிறந்த உதாரணம். இப்போதே முக்கிய ரூட்களில் ரயில் சேவை சிறப்பாக இருந்தாலும், இன்னும் கூடுதல் ரயில்கள் அல்லது பெட்டிகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அதிக வரவேற்பு இருக்கும் ரயில் ரூட்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரைக் கோவை எக்ஸ்பிரஸ் (12675) மற்றும் வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12635) ஆகிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு தெற்கு ரயில்வே விரிவான பதிலை அளித்துள்ளது
சென்னை டூ கோவை: ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் சென்னை முதல் கோவை வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸில் 7,44,302 பயணிகள் பயணித்துள்ளனர். காலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, சேலம் வழியாக மதியம் 2 மணியளவில் கோவையைச் சென்றடையும். அதிக பேர் பயணித்த ரயில் என்ற அடிப்படையில் இதுதான் பெஸ்ட் ரயில் என்றே சொல்லலாம்.
இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூர் மற்றும் மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸில் மொத்தம் 6,98,342 பேர் பயணம் செய்துள்ளனர். எழும்பூரில் இருந்து மதியம் 1.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி வழியாக இரவு 9.15 மணிக்குத் திருச்சிக்குச் சென்று சேரும்.
6 லட்சம் பயணிகள்: அதேபோல சென்னையில் மதியம் 2.30 மணிக்குக் கிளம்பி சேலம், ஈரோடு வழியாக இரவு 10.15 மணிக்குக் கோவை சென்றடையும் கோயம்புத்தூர்-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679), ரயிலில் 6,39,995 பேர் பயணித்துள்ளனர். மாலை 3.45 மணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்பி இரவு 11 மணிக்கு காரைக்குடி செல்லும் பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸில் (12605) 6,32,965 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த 4 ரயில்களில் தான் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
இதற்கு அடுத்து பொதிகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸில் (12661) 5,30,933 பயணிகளும், சோழன் எக்ஸ்பிரஸ் (22676) 5,15,224 பயணிகளும், நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12631) 5,07,502 பயணிகளும் பயணித்துள்ளனர்.
கோரிக்கை: இது குறித்து கொங்கு குளோபல் ஃபோரம் இயக்குநர் ஜே.சதீஷ் கூறுகையில், "தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தான் முக்கிய நகரமாக இருக்கிறது. சென்னை கோவை இடையே இரவு நேரத்தில் இரவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ஆர்டிஐ பதில் மூலம் இந்த ரூட்டில் பயணிகள் மிக அதிகளவில் பயணிப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இப்போது சென்னை கோவை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக ரயில்வே மாற்ற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications