திருக்குறளுக்கு உரை எழுதியது ஏன்? வைரமுத்து சொன்ன 60 ஆண்டு கால பின்னணி
சென்னை: திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு, கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து உரை எழுதி உள்ளார். ‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நூல் இன்று வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நூலை வெளியிட்டார். இந்த விழாவில் திருக்குறளுக்கு உரை எழுத தூண்டியது பற்றி பேசினார். அப்போது 60 ஆண்டுக்கு முன்பு இரவில் நடந்த சம்பவத்தை அவர் குட்டிக்கதையாக கவிதை நடையில் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று 3 பிரிவில் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்துக்கு 10 குறள்கள் என்று மொத்தம் 1330 திருக்குறளை வள்ளுவர் இயற்றி உள்ளார். மனிதனின் அனைத்து நிலைகளிலும் இந்த குறள் பொருந்துகிறது.

திருக்குறளுக்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து உரை எழுதியுள்ளார். இதற்கு 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டுள்ளார். இந்த ‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். வைரமுத்து முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் ‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை' புத்தகத்தை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் பெற்று கொண்டார்.
இந்த விழாவில் வைரமுத்து ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் திருக்குறளுக்கு உரை எழுத தூண்டப்பட்டது பற்றி விளக்கியிருந்தார். இதுதொடர்பாக வைரமுத்து கூறியதாவது:
என்னை சற்று அனுமதித்தால் உங்களை 60 ஆண்டுகள் பின்நோக்கி அழைத்து செல்ல வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்புகிறேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் ஓர் இரவு. ஊர் உறங்கிவிட்டது. விலங்கு உறங்கி விட்டது. பறவை உறங்கிவிட்டது. இலைகளுக்கு இடையே காற்று உறங்கிவிட்டது. நட்சத்திரங்களை காவலுக்கு வைத்துவிட்டு நிலா கூட உறங்கிவிட்டது.
ஒரேயொரு சிறுவன் அவனும், அவன் வீட்டில் கருப்பு புகையடித்த லாந்தரும் மட்டும் விழித்து இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று சொன்னால்.. வகுப்பில் தமிழாசிரியர் அசை பிரித்து காட்டியபோது ஒன்று சொன்னார். திருக்குறளில் 1,330 அருட்குறளும் ஒரு குறள் கூட தளை தட்டாது என்று சொன்னார்.
ஈற்றடி முச்சீராய் ஏனைய அடி நாற்சீராய்.. இயற்சீர், வெண்சீர் வந்து.. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வந்து.. பிற தளைகள் வாராது. செப்பலோசை பெற்று.. நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றுகொண்டு முடியும் அதுதான் திருக்குறள் என்று சொன்னார். ஒரு குறள் கூடவா.. 1,330 குறளில் ஒன்று கூட தளைதட்டாதா? என்று அந்த கருப்பு சிறுவன் வெள்ளை உள்ளத்தோடு, வெகுளி குணத்தோடு, அந்த திருக்குறளை இரவேல்லாம் அசை பிரித்தான்.
அசை பிரித்து அசை பிரித்து வள்ளுவனிடம் தோற்றுக்கொண்டே இருந்தான். இலக்கணத்தை வென்று கொண்டே இருந்தார் வள்ளுவர். அந்த சிறுவனுக்கு பெயர் வைரமுத்து. அவன்தான் 60 ஆண்டுகளுக்கு தமிழ் மன்றம் கூடியிருக்கிற இந்த பெருமன்றத்தில் அறிஞர்களும், பெரும் தலைவர்களும் பெரும் பேராசிரியர்களும் கூடியிருக்கிற இந்த பெருமன்றத்தில் திருக்குறளுக்கு உரை எழுதி உங்களின் கைத்தட்டலை காணிக்கையாக பெற்று கொண்டிருக்கிறேன் என் நிமிடத்தை தான் நான் பெரிய மகுடமாக நினைக்கிறேன் தோழர்களே.. நண்பர்களே.. ஏன் குறளுக்கு உரை எழுத வேண்டும். ஏன் குறளை படித்தால் புரியாதா?
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
என்பது யாருக்கும் தெரியாதா? தெரியும். ஆனால் நூறாண்டுக்கு ஒருமுறை ஒரு மொழி 10 விழுக்காட்டு சொற்களை இழந்து விடுகிறது.. சிதைந்து விடுகிறது அல்லது அழிந்து விடுகிறது.. அல்லது பொருளில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் குறளுக்கு விளக்கம் எழுதியுள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications