வட தமிழகத்தில் மழை.. ஊட்டியில் கடும் குளிர்.. நெல்லையில் வாட்டும் வெயில்.. விதவிதமாக வாட்டும் வானிலை
வடக்கே மேக மூட்டம் தெற்கே வெயில்... சில ஊர்களில் மழை மேற்கு மாவட்டங்களில் குளிர் என தமிழகத்தில் கலவையான வானிலையாக இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் அனலடிக்கும் என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில் அசானி புயலின் புண்ணியத்தால் காற்றும்... மேகமூட்டமுமாக சில நாட்கள் கடந்து விட்டது. அசானி புயல் அமைதியாக கரையைக் கடந்தாலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூரியன் இன்னமும் தலைகாட்டவில்லை.
Recommended Video
தமிழகம் முழுவதுமே கடந்த பிப்ரவரி மாதமே வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. மார்ச் மாதம் பங்குனி வெயில் பட்டையை கிளப்பியது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவானது.
ஏப்ரல் மாதத்தில் வெப்பசலனத்தால் இடியும் மின்னலுமாய் கோடை மழை கொட்டியது. இதனால் வறட்சி நீங்கி எங்கும் பசுமை திரும்பியுள்ளது. நீர் நிலைகளிலும் கொஞ்சம் தண்ணீர் தேங்கியுள்ளது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் சாலைகளில் ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அசானி புயல் தாக்கத்தால் பல ஊர்களில் இதமான வானிலை நிலவி வருகிறது.
அனலடிக்கும் அக்னி நட்சத்திரத்திற்கு இதமாக அடித்து ஊற்றப்போகும் கனமழை - 5 நாட்களுக்கு ஜில்
அக்னியை தணித்த மழை
மே மாதம் 4ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. பல ஊர்களில் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகி அது அசானி புயலாக தீவிரமடைந்தது. இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
கரையைக் கடந்த அசானி
அசானி புயல் அமைதியாகக் கரையை கடந்தாலும் ஆந்திரா கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சாரம் மழை பெய்யலாம் என்பது போல சில்லென்ற காற்றும் வீசுகிறது.
குளிர் அதிகம்
நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குளிர் நிலவுவதாக அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ள இந்த நேரத்தில் சீசனை அனுபவிக்க இப்போதிருந்தே சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். மேக மூட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பலரும் குளிரோடு குளுகுளுவென சீசனை அனுபவித்து வருகின்றனர்.
சீசன் காலத்தில் மழை
ஊட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சீசன் ஆரம்பித்து விட்டது. வழக்கமாக ஊட்டியில் 12 மணி வரை மிதமான வெயில் இருக்கும். அந்த இதமான சீசனை அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இப்போது வெயிலே இல்லாமல் காலையிலேயே சாரல் மழை பெய்கிறது. சேரும் சகதியுமாக உள்ளது கரண்ட் கட் ஆகி விடுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆலங்கட்டி மழை
வெயில் கொஞ்சம் கூட தலைகாட்டவில்லை. அக்டோபர் மாதம் மழை போல மே மாதத்தில் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் பல இடங்களை சுற்றிப்பார்க்க முடியாமல் ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்வதால் அதை ரசித்து செல்கின்றனர் சுற்றுலா பயணிகள்.
காற்றோடு இதமான வெயில்
திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட தெற்கு மத்திய மாவட்டங்களில் காலை நேரங்களில் வெயில் அடித்தாலும் பத்து மணிக்கு மேல் காற்று வீசத் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. அதேநேரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. உண்மையான அக்கினி வெயிலின் தாக்கம் அங்குதான் காணப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் இல்லாததால் மக்கள் வெளியே வர முடியாத நிலைமை உள்ளது. இப்படியாக தமிழகத்தில் அக்னி வெயில் காலம் கடக்கத் தொடங்கியுள்ளது.