பேரிடர் மீட்பு ஸ்பெஷலிஸ்ட்.. சுனாமி, புயல்ன்னா சூறாவளி வேகம்.. கிளிண்டனே பாராட்டிய ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை: சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ஜெ ராதாகிருஷ்ணனின் கொரோனா தடுப்பு பணியை சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டியுள்ள நிலையில் அவர் செய்த சாதனைகள் என்ன என்பதை பார்ப்போம்.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது. ஆனால் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை மட்டும் மாற்றாதது திருப்தி அளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தெரிவித்துள்ளது.
அண்மைகாலங்களில் உச்சநீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களில் சில விஷயங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசுகள், அதிகாரிகள் என வாங்கிக் கட்டி கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில் ஜெ ராதாகிருஷ்ணனை நீதிமன்றம் பாராட்டியது பெரிதாகவே பார்க்கப்படுகிறது.

பள்ளிப் படிப்பு
இந்த பெருமைக்குச் சொந்தக்காரரான ஜெ ராதாகிருஷ்ணன் யார் என்பதை பார்ப்போம். 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் பிறந்தார். இவர் கான்பூர், சண்டீகர், நாசிக் மற்றும் தியோலாலி ஆகிய நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பெங்களூரில் கால்நடை மருத்துவ அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

மரபியல்
பின்னர் விலங்குகளின் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறையில் முதுகலை பட்டம் பயின்றார். பின்னர் 1992 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிகளில் வெற்றி பெற்றார். தூத்துக்குடியில் 1994 ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996 முதல் 1999 வரை தமிழக நிதித் துறையின் துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

குடும்ப நலம்
1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், 2000 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை நில வருவாய் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஆணையராக பணியாற்றினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். சுமார் இரு ஆண்டுகள் இங்கு பணியாற்றிய நிலையில் பெண் சிசு கொலைக்கு எதிராக கடுமையாக போராடியவர்.

மாவட்ட ஆட்சியர்
பின்னர் 20004 - 2005 வரை தஞ்சை மாவட்ட ஆட்சியராக பதவியேற்றார். டிசம்பர் 26, 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையின் போது மாவட்ட ஆட்சியராக மீட்பு பணிகளை திறம்பட செய்தார். அவசர சூழலை கையாளுதல் மற்றும் பேரிடர் மேலாண்மை, மீட்பு பணிகள் உள்ளிட்டவைகளில் இவரது செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.

சுனாமி
இதனால் தஞ்சையிலிருந்து சுனாமியால் மோசமான பாதிப்பை சந்தித்த நாகையின் ஆட்சியராக பணியாற்றினார். இந்த கால கட்டத்தில் நிறைய நிவாரண முகாம்களை அமைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுனாமி யின் போது இவர் செய்த மீட்பு பணிகளால் அந்த மாவட்டம் இயல்பு நிலை திரும்பியதில் முதல் முறையாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றார்.

சுனாமி மறுசீரமைப்பு
ஐநா சபையின் சுனாமி மறுசீரமைப்புக்கான சிறப்பு தூதரான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் நாகை சென்று மீட்பு மணிகளை 2005 இல் பார்வையிட்ட போது அவரது நிர்வாகத் திறனை கிளிண்டனே பாராட்டினார். பின்னர் இலங்கை நிவாரண பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மீட்பு பணிகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசால் ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டார்.

உறுப்பு தானம்
2012- 2019 ஆம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலனின் முதன்மை செயலாளராக இருந்த போது மகப்பேறு மரணங்களை குறைத்தது மிகப் பெரிய மைல்கல்லாகும். அது போல் உறுப்பு தானத்தையும் ஊக்குவித்து அதிகரித்தார். 2015 சென்னை வெள்ளத்தின் போதும் சிறப்பாக செயலாற்றினார். தற்போது கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் அயராது உழைத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். அரசு மருத்துவமனைகளுக்கு திடீர் ஆய்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் விரைந்து கவனிப்பது உள்ளிட்ட செயல்களில் இவர் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications