பாலகிருஷ்ணா ரெட்டி யார் தெரியுமா?.. அப்ப எந்த கட்சி தெரியுமா??
கள்ளச்சாராயத்தை ஒழிக்க போராட்டத்தை நடத்தியவர் பாலகிருஷ்ணா ரெட்டி
சென்னை: அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி யார் தெரியுமா? அன்றைக்கு பாஜகவில் ரொம்ப தீவிரமாக இருந்தவர்தான்.
அன்று கல்வீசி எறிந்துவிட்டார் என்பதற்காக அமைச்சருக்கு இன்று தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கற்களை வீசியது கலவரத்துக்காக அல்ல... வன்முறைக்காக அல்ல...
1998-ல் மதுவுக்கு எதிரான போராட்டம் அது. அன்றைய காலகட்டத்தில் ஓசூர் அருகே பாசனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் வெகு ஜோராக நடந்தது.
கல்வீசப்பட்டது
அந்த கள்ளச்சாராயத்தை தடை செய்யக் கோரிதான் போராட்டம் நடந்தது. பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியது பாலகிருஷ்ண ரெட்டிதான். அந்த போராட்டத்தில்தான் பஸ்கள் மீது கல்வீசப்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
78-வது குற்றவாளி
பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் தான் 108 பேர் மீது வழக்கு பதிய செய்யப்பட்டது. ஆனால் இதில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி 78-வது குற்றவாளிதான். ஒரு நல்ல விஷயத்துக்காக போராடியதால்தான் இந்த விவகாரமே ஆரம்பமானது.
எழுத படிக்க தெரியாது
அன்றைய நாளில் மதுவுக்கு எதிராக போராடிய பாகிருஷ்ண ரெட்டி இன்றும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால், தமிழில் பேச தெரிந்த இவருக்கு எழுத படிக்க தெரியாது என்பதுதான் உண்மை. அதிமுக சார்பாக போட்டியிடும்போதுகூட தேர்தல் சமயத்தில் இவர் தெலுங்கில் பேசிதான் ஓட்டுக்களை சேகரித்தார்.
தெலுங்கில் பேசினார்
இவர் அமைச்சராக பொறுப்பேற்றபோது, ''தமிழில் எழுத, படிக்க தெரியாத ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதே, சட்டசபையில் தெலுங்கில் பேசுவாரா, தமிழில் பேசுவாரா? மானிய கோரிக்கையின்போது, எப்படி பதில் சொல்வார் என்றெல்லாம் பரபரப்பாக அன்றைய நாட்களில் பேசப்பட்டது. ஆனால் சட்டசபையிலே கூட தெலுங்கில் பேசிதான் ஃபேமஸ் ஆனார்.