தனி நபராக சட்டசபை புகுந்து ஜெயலலிதாவையே கலங்கடித்த 'இந்திரஜித்' பரிதி இளம்வழுதி!
Recommended Video
சென்னை: ஜெயலலிதா அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பரிதி இளம்வழுதி. வாழ்வின் பிற்காலத்தில் இவரே, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவமும் அரங்கேறியது.
திமுகவில் முன்னணி பேச்சாளராக விளங்கியவர் இளம்பரிதி. இவரது மகனையும் திமுகவில் பேச்சாளராக்க பேரவா கொண்டார். இதன் காரணமாகவே, 24 வயதிலேயே வில்லிவாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மகன் காந்தியை மேடையேற்றினார்.
முதல் மேடையிலேயே அவரது பேச்சு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்களை கவர்ந்தது.
பரிதி இளம்வழுதி
இதன்விளைவாக, காந்தி என்ற, பெயரை மாற்றி, பரிதி இளம்வழுதி என்று கருணாநிதியால் பெயர் மாற்றம் பெற்றவர். இதன்பிறகு அடுத்த ஆண்டே, அதாவது, 1984ம் ஆண்டு திமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 25. மொத்தம் 6 முறை சட்டசபை உறுப்பினராகியுள்ளார். இதில் 5 முறை எழும்பூர் தொகுதியில் வென்றவர்.
கருணாநிதி வெற்றி
ராஜிவ்காந்தி படுகொலையை தொடர்ந்து, 1991ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது திமுக கூட்டணி 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. திமுக சார்பில் கருணாநிதி மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனியொருவர்
ஆனால் அப்போது எழும்பூர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், திமுக சார்பில் பரிதி இளம்வழுதி போட்டியிட்டு வென்றார். திமுக சார்பில் தனி நபராக சட்டசபைக்கு சென்றது இவர்தான். தனி நபராக இருந்தபோதிலும், ஜெயலலிதா தலைமையிலான முதலாவது ஆட்சிகாலமான அப்போது, ஆளும் கட்சிக்கு கடும் குடைச்சலை கொடுத்தார்.
கேள்விக் கணைகள்
அரசியல் அனுபவம் இல்லாத ஜெயலலிதாவை தனது கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார். இவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஆளும் கட்சியினர் தடுமாறினர். நகைச்சுவையுடன் கூடிய இவரது பேச்சு, எதிர்க்கட்சியினரையும் சிரிப்பலையில் ஆழ்த்தும். அதேநேரம், சிந்திக்க வைக்கும், பதிலளித்தே ஆக வேண்டிய கேள்விகளையும் அவர் கேட்கத் தவறியதில்லை. தனியொருவராக களம் கண்ட பரிதி இளம்வழுதி ஜெயலலிதாவிற்கும் அவர் அரசிற்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். இதை பார்த்த கருணாநிதி, மகாபாரத கதாப்பாத்திரமான வீர அபிமன்யு என்றும், ராமாயண கதாப்பாத்திரமான இந்திரஜித் என்றும், பரிதி இளம்வழுதியை புகழ்ந்துரைத்தார்.
பரிதி முதல் தோல்வி
1996ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி. ஆனால் 2011ல் அதிமுக-தேமுதிக கூட்டணியை எதிர்த்தது திமுக. அப்போது, எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளரிடம், வெறும், 192 ஓட்டுகளை குறைவாக பெற்று, பரிதி இளம்வழுதி தோல்வியை தழுவினார். இதன்பிறகு திமுக தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதிமுகவில்
எந்த ஜெயலலிதாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரோ, அதே ஜெயலலிதா முன்னிலையில் 2013ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார், பரிதி இளம்வழுதி. உடனே இவருக்கு, கொள்கைப் பரப்பு இணைச்செயலார், தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது அமைதியாக இருந்த, பரிதி இளம்வழுதி, கடைசி காலத்தில் டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டார்.