சட்டசபை எதிர்கட்சித்தலைவர் யார் - ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் எம்எல்ஏக்கள் மல்லுக்கட்டு
தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவரை தேர்வு செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை: தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவரை தேர்வு செய்வதற்கான மிக முக்கியமான கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவராக யார் வர வேண்டும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் காரசாரமாக விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் ஓ.பன்னீர் செல்வம். முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சிக்கு ஈ.பி.எஸ் என்ற உடன்படிக்கையின்படி செயல்பட்டவர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் யாரென்ற முடிவை எடுக்கவேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்
அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பழனிசாமியை கொண்டுவர எம்எல்ஏக்களில் ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டுவர மற்றொரு தரப்பினரும் விரும்புகின்றனர். ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும், பழனிசாமி இதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவுசெய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என சர்ச்சை எழுந்தது. பல குழப்பங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. அதிமுக 66 சீட்டுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 63 எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 3 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது பற்றி முடிவெடுக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவில் நீடிக்கும் இரட்டைத் தலைமையால் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும் கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் எனவும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென விரும்புகின்றனர். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்பதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென அவரது வேட்பாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர் விவகாரம் அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் எதிர்கட்சித்தலைவராக யாரை அமர வைப்பது எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் இன்றைய தினம் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications