"கருப்பு ஆடு".. பாஜகவை புட்டு புட்டு வைத்த டாக்டர் சரவணன்..தள்ளாடுகிறதா "தலை".. இதென்ன புது மேட்டர்
டாக்டர் சரவணன் பாஜகவை விமர்சித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: அண்ணாமலை மற்றும் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பேசும் ஆடியோ வைரலான நிலையில், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீது பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்... இதனிடையே, பாஜகவை விமர்சித்து, டாக்டர் சரவணன் ஒரு யூடியூப் சேனலுக்கு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், நிதி அமைச்சரின் வாகனம் மீது பாஜகவினர் செருப்பை வீசினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!
பிடிஆர்
இதனையடுத்து செருப்பு வீச்சு சம்பவத்திற்கு அமைச்சர் பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், பாஜகவில் இருந்தும் விலகினார்... இதனையடுத்து புதிய மாவட்ட தலைவராக சுசீந்திரனை பாஜக தலைமை நியமித்துள்ளது. இந்நிலையில், அண்ணாமலையும், சுசீந்திரனும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி கடந்த 2 நாட்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
மாஸா பண்ணணும்
அந்த ஆடியோவில், ஒருவர், மற்றொருவரிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என கேட்டு, எல்லாரையும் வர சொல்லுமாறு கூறப்படுகிறது. மேலும் அந்த நபர், மாஸா பண்ணணும், வேறு மாதிரி பண்ணுவோம்... இதை எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்து கொண்டிருக்கிறேன்... அரசியல் பண்ணிவிடுவோம் என்று சொல்கிறார்.. இந்த ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் இல்லை, திமுகவினர் தில்லு முல்லு வேலை செய்துள்ளனர், அண்ணாமலை வேறு எங்கெங்கோ பேசியதை எல்லாம் எடிட் செய்து, ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என்று சுசீந்திரன் கூறியிருந்தார்.
டாக்டர் சரவணன்
மேலும், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது... இந்நிலையில், பாஜகவில் இருந்து வெளியேறிய டாக்டர் சரவணன், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், பாஜகவை பற்றி சரமாரியாக விமர்சித்துள்ளார். அத்துடன், ஆடியோவில் பேசியது அண்ணாமலை இல்லை என்றால், அவருக்கு எதிராக பாஜகவுக்குள்ளேயே யாரோ சதி செய்கிறார்கள் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அட்ரஸ் சாயல்
சரவணன் அந்த பேட்டியில் சொல்லும்போது, "மதுரையில் நடந்த அந்த ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெளியே வரவில்லை.. ஆரம்பத்தில் பாஜகவில் சீட் வாங்கிட்டு, ஓட்டு கேட்க போகும்போது, என்னால் நிறைய இடங்களுக்கு செல்ல முடியவில்லை.. ஒரு டாக்டர் என்ற முகவரியுடன் நான் சென்று கொண்டிருந்த இடங்களிலேயே, பாஜக என்ற சாயலுடன் நுழைய முடியவில்லை.. மக்கள் ஏத்துக்காத ஒரு இடத்துக்கு வந்துட்டோமே என்ற வருத்தம் முதல்நாளிலேயே எனக்கு துவங்கிவிட்டது..
அட்ஜஸ்ட் + சாயல்
அட்ஜஸ்ட் செய்து போய் கொண்டிருந்தபோதும், இது அதிகமாகி கொண்டேதான் போனதே தவிர, அந்த சாயல் என் மீது போகவில்லை.. இப்போது அங்கிருந்து வெளியே வந்தது, நல்லது என்று நினைக்கிறேன்.. நான் வழக்கமாக சந்திக்கும் நோயாளிகள், சிறுபான்மை மக்கள் எல்லாருமே என்கிட்ட கேட்டாங்க.. இந்த கட்சிக்கு ஏன் வந்தீங்க.. இதுவரைக்கும் பாஜகவுக்கு ஓட்டு போடறதுக்கு, ஓட்டு மிஷின் பக்கமே நாங்கள் போனதே கிடையாதே.. ஏன் இப்படி செய்துட்டீங்க என்று உரிமையாக கேட்டாங்க..
போர்டுகள் - கருவி
"இங்கே வராதீங்க, சிறுபான்மையினர் நிறைய பேர் இருக்கிறோம்" என்று பல இடங்களில் போர்டும் வைத்துவிட்டனர்.. சிறுபான்மையினருக்கு எதிராக, பாஜக இருப்பார்கள் என்று வெளியே சொன்னார்கள்.. ஆனால், நான் உள்ளே போய் பார்த்தபிறகுதான் புரிந்தது.. எங்களை கருவியாக பயன்படுத்தி கொண்டுவிட்டனர்.. எத்தனையோ நல்ல நிர்வாகிகள் பாஜகவில் இருந்தாலும், திமுக என்றால், அவர்களை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற கருத்தை அவர்களுக்குள் விதைத்து விடுகிறார்கள்.. நிர்வாகிகளும் வேற வழியில்லாமல் திமுகவை எதிர்த்து வருகிறார்கள்..
ஆடியோ லீக்
மக்களுக்கு நல்லது செய்து, ஆக்கப்பூர்வமான விஷயங்களை பாஜகவில் செய்ய மாட்டாங்க.. கீழ்த்தரமான செயல்பாடுகளை செய்துவிட்டால் அதுவே அவர்களுக்கு பெருமைதான்.. கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் காட்ட மாட்டார்கள்.. அவர்களின் சிந்தனை லெவல் அவ்வளவுதான்.. மதுரை சம்பவம் நடந்தபோது, இந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லைன்னு சொன்னார் அண்ணாமலை.. ஆனால், ஆடியோ இப்படி வந்துள்ளது.. யார் இதை செய்தது? அண்ணாமலை இல்லை என்றால், அது மேலும் சிக்கல்தான்..
யார் அவர்
அப்படியானால், அண்ணாமலைக்கு எதிராக, யாரோ இன்னொரு பாஜக பிரமுகர் அண்ணாமலை போல பேசி ஆடியோவை லீக் செய்திருக்கலாம்" என்று தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார் சரவணன்.. அப்படியானால், லீக் செய்த அந்த பாஜக பிரமுகர் யார்? ஏன்? என்ற கேள்விகள் பாஜக களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இதனிடையே, மகா சுசீந்திரன் தலைமையிலான பாஜகவினர் 10-க்கும் மேற்பட்டோர் ஆடியோ வெளியானதற்கும் பாஜகவின் முன்னாள் மதுரை மாவட்ட தலைவரான சரவணனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.. போலீசுக்கு இந்த ஆடியோ சென்றுள்ளதால், அதன் உண்மைத்தன்மையை போலீசாரும் கொண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
கலகம்
இதனிடையே, தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று சில முக்கிய தலைவர்கள் கட்சிக்குள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம்.. காரணம், அண்ணாமலையின் அசுர வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.. செல்வாக்கு ஒருபக்கம் கூடினாலும், ராகவன் வீடியோ முதல் நிறைய விவகாரங்களை அவர் சரியாக கையாளவில்லை என்பதாலும், கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேருக்கு பதவிகள் கிடைக்காமல் இருக்கும்போது, அண்ணாமலை குறுக்கு வழியில் மேலே உயர்ந்து கொண்டிருப்பதை சில பாஜக நிர்வாகிகளாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லையா.. அதனாலேயே இப்படி வேண்டுமென்றே கலகத்தை மூட்டிக் கொண்டும், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டும் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.