யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?
அதிமுகவில் படிபடியாக பல பதவிகளை அடைந்தவர் கே.எஸ்.தென்னரசு
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை அறிவித்துள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வரும் இவர் அதிமுகவில் படிபடியாக முன்னேறி அக்கட்சியில் இதற்கு முன் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.
25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு.. ஓபிஎஸ் யாரை அறிவிப்பார்?
ஸ்கிரீன் பிரிண்டிங்
ஈரோட்டில் ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை நடத்தி வரக் கூடிய கே.எஸ்.தென்னரசு கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். 1992 ஆம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராக அதிமுகவில் முதல் பொறுப்பு பெற்ற இவர் 1995ஆம் ஆண்டு ஈரோடு நகர அதிமுக செயலாளரானார். அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக ஒரு காலத்தில் வலம் வந்தவர். இப்போதும் செங்கோட்டையனின் ஆதரவாளர் தான், ஆனால் முன்பிருந்த பிடிப்பு இப்போது இல்லை எனது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர்.மன்றம்
1999ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரான கே.எஸ்.தென்னரசு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2001 ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனிடையே மீண்டும் ஈரோடு மாநகர அதிமுக செயலாளர், ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட தலைவர் பொறுப்புகளை வகித்தார். இதனிடையே கடந்த 2011ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி பொறுப்பாளராக ஜெயலலிதாவால் கே.எஸ்.தென்னரசு நியமிக்கப்பட்டார்.
2016ல் மீண்டும் சீட்
கடந்த 2016ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 2வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அமைதியானவர், அலட்டிக் கொள்ளாமல் கட்சிப் பணியாற்றக் கூடியவர் என்பது இவர் குறித்து உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கூறும் கூடுதல் தகவலாகும். பல ஆண்டுகளாக ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வருவதால் அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளையும் கே.எஸ்.தென்னரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுதி முழுவதும்
கே.எஸ்.தென்னரசுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் சொந்த பந்தங்கள் ஏராளமாக உள்ளன. இதுமட்டுமல்லாமல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் தனக்கு சீட் வேண்டும் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்து வந்தார். மாஜி அமைச்சரே தடுமாறி தயங்கிய நிலையில் இவரது ஆர்வம் எடப்பாடி பழனிசாமியின் கவனம் ஈர்த்ததால், கே.எஸ்.தென்னரசுவை ஒரு மனதாக டிக் செய்து தனது தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவித்துவிட்டார்.