யாருக்கு லாபம்? யாருக்கு ஏமாற்றம்? பூஜ்ஜியமாகும் மின்கட்டணம்.. 500 யூனிட் தாண்டினால் என்ன ஆகும்?
சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. இந்த அறிவிப்பு எளிய குடும்பங்களின் மின்சாரச் சுமையை முற்றிலுமாக நீக்கி ஜீரோ பில் நிலையை உருவாக்கினாலும், இதில் உள்ள சில நிபந்தனைகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.. குறிப்பாக, 500 யூனிட் என்ற உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் யாருக்குப் பூரண லாபம் கிடைக்கும், யாருக்கு ஏமாற்றம் மிஞ்சும்? என்பது பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்புதான்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனே மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டாலும், உண்மையில் இந்தத் திட்டத்தினால் யாருக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கப்போகிறது? யாருக்கு ஏமாற்றம் இருக்கப்போகிறது? என்ற விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதற்கும் தற்போது அரசாணையாக வந்துள்ளதற்கும் இடையே உள்ள சில நுணுக்கமான வேறுபாடுகளைப் பொருளாதார நிபுணர்களும் பொதுமக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்..
யார் யாருக்கு இலவசம்
இந்தத் திட்டத்தினால் நேரடியான மற்றும் முழுமையான பலனை அடையப்போவது தமிழகத்தின் அடித்தட்டு மக்களும், மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் எளிய குடும்பங்களும்தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
காரணம், ஒரு சாதாரண வீட்டில் 2 மின்விசிறிகள், 1 தொலைக்காட்சி மற்றும் சில விளக்குகளை மட்டுமே பயன்படுத்துபவர்கள், 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்குள் இருந்தால் இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
இதுவரை 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் கட்டணம் செலுத்தி வந்த ஏழை மக்களுக்கு, இந்த 200 யூனிட் சலுகை என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.. அவர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மின்கட்டணச் சுமை இனி முற்றிலுமாக நீங்கி, 'ஜீரோ பில்' என்ற நிலையை எட்டும்..
200 யூனிட் இலவசம்
ஆனால், நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரை இந்த லாபம் ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடுகிறது.. தமிழக அரசின் அரசாணையின்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவசம் பொருந்தும்.
அதாவது, நீங்கள் 500 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தினால் கூடுதல் 100 யூனிட் சலுகையைப் பெற்று பலனடையலாம்.. ஆனால், 500 யூனிட்டைத் தாண்டும் நடுத்தரக் குடும்பங்களுக்கு பழைய 100 யூனிட் இலவசம் மட்டுமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட் தாண்டிவிடும்
கோடைக் காலங்களில் குறைந்தபட்சம் 1 ஏசி அல்லது வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் நடுத்தரக் குடும்பங்கள் எளிதாக 500 யூனிட்டைத் தாண்டிவிடுவார்கள் என்பதால், அவர்களுக்கு இந்தத் திட்டத்தினால் கூடுதல் லாபம் ஏதுமில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
தேர்தல் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று வழங்கப்பட்ட வாக்குறுதி, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் அதாவது மாதம் 100 யூனிட் மற்றும் 500 யூனிட் உச்ச வரம்பு என மாற்றப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது..
மாதம் 200 யூனிட் வீதம் 2 மாதங்களுக்கு 400 யூனிட் இலவசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, இந்த அரசாணை ஒரு வகையான 'கட்டுப்படுத்தப்பட்ட சலுகையாகவே' பார்க்கப்படுகிறது.. அனைவருக்கும் மாதம் 200 யூனிட் வழங்கினால் அரசுக்கு வருடத்துக்கு சுமார் 12,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதையும், நஷ்டத்தில் இயங்கும் மின்சார வாரியத்தின் நிலையையும் கருத்தில் கொண்டே இந்த 500 யூனிட் உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..
1730 கோடி ரூபாய் மின் கட்டண மானிய சுமை
மொத்தத்தில், இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு 1,730 கோடி ரூபாய் கூடுதல் மின் கட்டண மானியச் சுமையை ஏற்கிறது.. இதன் மூலம் 500 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் 1 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், 500 யூனிட்டைத் தாண்டி மின்சாரம் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு தற்காலிக ஆறுதல் மட்டுமே.. மின்சார வாரியத்தைப் பாதுகாப்பதற்கும், சாமானிய மக்களுக்கு உதவுவதற்கும் இடையே ஒரு சமநிலையை காப்பதற்கு இந்த 500 யூனிட் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எப்படி பார்த்தாலும் எளிய மக்களின் வீட்டில் இனி மின்சார விளக்குகள் இலவசமாகவே கட்டாயம் ஒளிரும்.
யாருக்கு எவ்வளவு லாபம்
இதனிடையே, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி தந்துள்ள தகவலின்படி, 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பால் சுமார் ஒரு கோடி பேர் பயனடைய உள்ளனர்.. இதன் மூலம் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் இனி 675 ரூபாய்க்குப் பதிலாக 450 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது.
அதேபோல் 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு 900 ரூபாயும், 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு 1,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமே தொடரும் என்பதும், அவர்களின் இதர கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications