அதிமுகவின் உயிர் நாடியான அவைத் தலைவர் பதவி.. ஓபிஎஸ்ஸின் சாய்ஸ் இவரா?.. எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: அதிமுகவின் அவைத் தலைவராக பண்ருட்டி ராமசந்திரனை ஓபிஎஸ் நியமிக்க போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
அதிமுகவின் அவைத் தலைவராக மதுசூதனன் இருந்தார். ஒவ்வொரு முறை உள்கட்சி தேர்தலின் போதும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வேட்பாளர்கள் மாறினாலும், அவைத் தலைவர் பதவியை மட்டும் மதுசூதனனிடம் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பறித்ததே இல்லை.
இதற்கு காரணம் அவர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவுக்கு எதிரிகளால் ஆபத்து வரும் போது போயஸ் தோட்ட இல்ல வாசலில் காவல் காத்து ஜெயலலிதாவை அரணாக இருந்து பாதுகாத்தவர் என்ற நன்றி உணர்வும்தான் என்கிறார்கள். இதனால்தான் மதுசூதனன் தனது உயிர் பிரியும் வரை அவைத் தலைவராகவே இருந்தார்.
மீண்டும் ஒரு கரூர் கடத்தல்.. அடி அடின்னு அடிச்சிட்டாங்க! அதிமுக பிரமுகருக்கு மிரட்டல்! பரபர புகார்!
அவைத் தலைவர் பதவி
அதிமுகவில் அவைத் தலைவர் பதவி என்பது முக்கியமானது. கட்சியில் பிளவுகள் ஏற்பட்டாலும் அவைத் தலைவருக்கே கொடியையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த அதிகாரம் உள்ளது. இது கடந்த 2016 இல் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட போதே தெரியவந்தது. இந்த நிலையில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமானதை அடுத்து அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அமைச்சர் ஜெயக்குமார்
இந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் அடிபட்டது. இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கியது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழூ கூட்டத்தில் ஓபிஎஸ்ஸின் ஒப்புதல் இல்லாமலேயே அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை எடப்பாடி பழனிசாமி நியமித்து உத்தரவிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானங்களில் இந்த தீர்மானம் இல்லாததால் இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நியமித்த பெரும்பாலான பதவிகளில் இருந்தவர்களை ஓபிஎஸ் நீக்கிவிட்டு புதிதாக நியமனங்களை செய்துள்ளார். அந்த வகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்துள்ளார். அது போல் 88 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார். கட்சியின் அமைப்பு செயலாளராக மைத்ரேயனையும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக மருது அழகுராஜையும் பெங்களூர் புகழேந்தியையும் நியமித்துள்ளார்.
அவைத் தலைவர் பதவி
ஆனால் இது நாள் வரை அவைத் தலைவர் பதவியில் கை வைக்கவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் கழகத்தின் முன்னோடி பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என அறிவித்து அதை ஓபிஎஸ் நடத்தி முடித்துள்ளார். நேற்றைய தினமே அவைத் தலைவராக பண்ருட்டியாரை ஓபிஎஸ் நியமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இனி வரும் காலங்களில் பண்ருட்டி ராமசந்திரனை அவைத் தலைவராக ஓபிஎஸ் நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூத்த அரசியல்வாதிகளுடன் பழகிய அனுபவம் அவருக்கு உண்டு. அரசியல் சூத்திரதாரி... எல்லாவற்றுக்கும் மேல் பண்ருட்டியார் அனுபவசாலி... எனவே அந்த பதவிக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. தேமுதிகவின் அரசியல் ஆலோசகராக இருந்து பண்ருட்டி ராமசந்திரன் தன்னை நிரூபித்துள்ளார். பின்னர் விஜயகாந்த், பிரேமலதாவின் தனிப்பட்ட முடிவுகளால் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து அந்த கட்சியிலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.