ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு? பரபரக்கும் அதிமுக!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி அணி களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈபிஎஸ் அணி சார்பில் இன்று மாலை வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு அணிகளும் போட்டியிட்டால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் அல்லது இருவருக்குமே இரட்டை இலை கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற பரபரப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
எனினும், சுயேட்சை சின்னத்திலாவது போட்டியிடுவது என உறுதியாக இருக்கும் ஈபிஎஸ் தரப்பு இன்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரசுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது அவரது குடும்பத்தில் ஒருவர் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

விட்டுக்கொடுத்த தமாகா
ஆனால் எதிர் தரப்பு கூட்டணியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்குமான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், மீண்டும் தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

இன்று வேட்பாளர் அறிவிப்பு?
இடைத்தேர்தலில் தமாகா போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தால் எதிர்க்கட்சிகள் பலவீனமடையும் என்பதால் அதிமுகவே தேர்தலில் போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட ஜிகே வாசன், அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று பாஜக தலைவர்களுடன் அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு அதிமுக வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுயேட்சை சின்னத்தில்
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது இருப்பது ஓ.பன்னீர்செல்வம்தான். அவரும் கடிதம் கொடுத்தால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். சின்னத்திற்கு பாஜக உதவ வேண்டும் என்று கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடங்கினால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவும் எடப்பாடி அணி முடிவு செய்துள்ளது.

வேட்பாளர் யார்?
அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான கே.வி.ராமலிங்கம் 2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஜெயலலிதா அமைச்சரவையில் சிலகாலம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசுவும் வேட்பாளருக்கான ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை வேட்பாளர் யார் என ஈபிஎஸ் அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மாஜிக்களுடன் ஆலோசனை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பணன், சி.வி.சண்முகம் ஆகிய 6 அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முக்கிய முடிவுகள்
மேலும், இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிடுவது, அதற்காக அ.தி.மு.க சட்ட வல்லுநர்கள் குழுவினரிடம் ஆலோசனை நடத்துவது பற்றியும் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இன்று மாலை?
இன்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு பெறுவது பற்றியும், ஓபிஎஸ் தரப்பு போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பற்றியும், வேட்பாளர் பெயரை இறுதி செய்வது பற்றியும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இன்று மாலை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படலாம் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications