கட்சிக்காரன் வராம யாரு வருவா? இதெல்லாம் ஒரு புகாரா? திமுக எம்.எல்.ஏவை கடுமையாக கடிந்த அமைச்சர் நேரு!
சென்னை: அரசு நிகழ்ச்சிக்கு கட்சிக்காரன் வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணனை அமைச்சர் நேரு கடிந்திருக்கிறார்.
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கம்பம் ராமகிருஷ்ணன். இவருக்கும் அம்மாவட்டத்தின் முன்னாள் பொறுப்பாளரான ஜெயக்குமாருக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் காலை சிற்றூண்டி திட்ட துவக்க விழாவில் ஜெயக்குமார் கலந்துகொண்டதை மையமாக வைத்து தலைமைக்கு புகார் அனுப்பியிருந்திருக்கிறார் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் தங்க தமிழ்செல்வனோடு கம்பம் ராமகிருஷ்ணன் வார்த்தை யுத்தம் நடத்தியதை நாம் கூறியிருந்தோம் அல்லவா, அப்போது தான் இந்த விவகாரமும் நடந்திருக்கிறது. காலை சிற்றூண்டி துவக்க விழாவில் ஜெயக்குமார் கலந்துகொண்டதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என வினவி கம்பம் ராமகிருஷ்ணனை அமைச்சர் நேரு ஆஃப் செய்திருக்கிறார்.
தன்னுடைய புகார் காரணமாக எதிர்தரப்பை அழைத்து தலைமை கண்டிக்கும் என எண்ணிய கம்பம் ராமகிருஷ்ணனுக்கு இது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. கடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலின் போது, கம்பம் ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட விருப்பமனு கொடுத்தவர் ஜெயக்குமார்.
அமைச்சர் நேருவும், அன்பகம் கலையும் அழைத்து பேசியதாலேயே அவர் போட்டியிலிருந்து ஒதுங்கினார். ஏற்கனவே தங்க தமிழ்செல்வனோடு பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கும் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு ஜெயக்குமார் விவகாரமும் பின்னடைவை தான் தந்துள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி தான் தேனி மாவட்ட திமுகவுக்கு மேலிட பொறுப்பாளராக உள்ளார் என்பதால் அவர் வசமும் இந்த பஞ்சாயத்து சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications