விடவே கூடாது.. உறுதியாக சொன்ன விசிக.. "பழைய" தவறை செய்யாமல் துணிச்சல் முடிவு.. திருமா திருமாதான்!
சென்னை: திமுக கூட்டணியில் 6 சட்டசபை தொகுதிகளை மட்டுமே விசிக பெற்று இருந்தாலும் கூட அதன் தலைவர் திருமாவளவனின் இந்த முடிவு வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு திருமா "ஸ்மார்ட்" முடிவை எடுத்துள்ளார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Recommended Video
அரசியலில் சாணக்கியர் என்று யாருமே கிடையாது.. எல்லோரும் மாணவர்கள்தான். ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு பிரசாரமும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டிக்கொண்டே இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அரசியலுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் முந்தைய தேர்தல்களில் கற்ற பாடங்களை வைத்து இந்த தேர்தலில் சிறப்பான முடிவை எடுத்துள்ளார். விமர்சனங்கள் குறித்து அஞ்சாமல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு திருமா துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்... திருமாவின் முடிவு குறித்து பார்க்கும் முன் ஒரு குட்டி ஸ்டோரி!
2016 தேர்தல்
2021 சட்டசபை தேர்தலுக்கு திமுக தயாராகி வருவது போலவே 2016 சட்டசபை தேர்தலுக்கும் இதேபோல்தான் தயார் ஆனது. அப்போது திமுகவிற்கு எதிராக மதிமுக கொஞ்சம் தீவிரமாக செயல்பட்டு வந்தது. திமுகவும் பெரிதாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் எல்லாம் இல்லை. திமுகவை வீழ்த்தும் முடிவில் மதிமுக தீவிரமாக இருந்தது. இந்த தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, 2015 அக்டோபரில் ஏற்படுத்திய மூன்றாவது அணிதான் மக்கள் நல கூட்டணி!
மக்கள் நல கூட்டணி
திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று கூறி தேமுதிக தலைவர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மநகூ தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் மநகூ படுதோல்வியை சந்தித்தது. 2016 தேர்தலில் மநகூ தோல்வி அடைந்தாலும் ஆட்சிக்கு எதிராக சென்ற வாக்குகளில் கணிசமான வாக்குகளை பிரித்தது. திமுகவின் தோல்விக்கு இப்படி வாக்குகள் பிரிந்தது முக்கிய காரணமாக அமைந்தது.
விசிக
அதன்பின் மநகூ உடைந்தது, பின் திமுகவுடன் விசிக, மதிமுக நெருக்கமாகி கடந்த லோக்சபா தேர்தலை ஒரே கூட்டணியில் சந்தித்தது. அப்போதே மநகூ குறித்த தனது வருத்தத்தை விசிக தலைவர் திருமா தெரிவித்து இருந்தார். ஓட்டுகள் பிரிந்ததன் மூலம் அதிமுக எப்படி வெற்றிபெற்றது என்பது குறித்த வருத்தத்தை சில மேடைகளில் திருமாவளவன் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
பாடம்
இந்த அனுபவமே தற்போது திமுக கூட்டணியில் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நீடிக்க வேண்டும் என்று திருமா உறுதியாக இருக்க காரணம் ஆகும். திமுக எவ்வளவு தொகுதி கொடுத்தாலும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அதை தீர்க்க வேண்டும். கூட்டணியில் இருந்து வெளியேற கூடாது, அவசரப்பட்டு வீம்பாக முடிவு எதையும் எடுக்க கூடாது என்பதில் திருமா உறுதியாக இருந்துள்ளார்.
மூன்றாவது அணி
மீண்டும் இன்னொரு மூன்றாவது அணியை உருவாக்கினால் ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது, வாக்கை வேண்டுமானால் பிரிக்கலாம் என்பதில் விசிக தெளிவாக இருக்கிறது. இதனால்தான் திமுகவை விடமால் கெட்டியாக பிடித்துள்ளது. குறைந்த இடங்கள் கிடைத்தால் அதில் வெல்ல வேண்டும் என்பதே விசிகவின் பிளான். இதனால்தான் திமுக 6 தொகுதிகள் கொடுத்தும் கூட அதை பற்றி வருத்தம் கொள்ளாமல் விசிக மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
பாஜக சக்தி
இதை திருமாவே வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். திருமாவளவன் இன்று அளித்த பேட்டியில், தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம்; வாக்குகள் சிதறினால் பாஜகவின் திட்டம் வென்றுவிடும்; கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது. ஆர்எஸ்எஸ், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம், இதற்காக எதையும் செய்ய தயார் என்று திருமா வெளிப்படையாக வாக்கு சிதறல் குறித்து பேசிவிட்டார்.
உறுதி
விசிக கட்சியினர் இந்த ஒதுக்கீட்டில் பெரிய அளவில் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் திருமா இதை ஸ்மார்ட் பிளான் என்றே நினைக்கிறாராம். லோக்சபா தேர்தலில் திமுக 2 இடம்தான் கொடுத்தது.. ஆனால் அதில் இரண்டிலும் விசிக வென்று, திருமா, ரவிக்குமார் எம்பி ஆனார்கள். அதேபோல் திமுக கூட்டணியில் 6 எம்எல்ஏக்கள் இடங்களையும் வென்றால் கூட அது சிறப்பான வெற்றியாகவே இருக்கும் என்று திருமா கருதுகிறார்.
அதிக இடம்
அதிக இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைவதற்கு பதிலாக குறைவான இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெல்வதே நல்ல முடிவாக இருக்கும் என்று திருமா கருதுகிறார். இதுதான் இன்று திமுகவிற்கு அவர் சம்மதம் தெரிவிக்க காரணம் என்கிறார்கள். 2016ல் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று திருமாவளவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.