‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள நடிகர் விஜய் இன்று நடக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது கட்சியில் 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்துள்ள நிலையில் இன்று என்ன நடக்கும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
தமிழகத்தில் நடிகர் ரஜினிக்கு பிறகு அரசியலுக்கு வருகிறார் என்று அடிக்கடி தலைப்பு செய்தியானவர் நடிகர் விஜய். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளார்.
இன்று நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மாறாக வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் தான் இலக்கு. அந்த தேர்தலில் தான் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கும் என்று கட்சி தொடங்கிய நாளிலேயே தெளிவாக கூறிவிட்டார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலம் மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்க பிரத்யேக செயலி, இணையதளத்தை அவர் தொடங்கினார். தற்போது வரை அவரது கட்சியில் 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லோக்சபா தேர்தலில் நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அரசியல் நகர்வு என்பது எப்படி இருக்கும்? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக கல்லூரி மாணவிகள் முதல் நடுத்தர வயது பெண்கள் என மகளிர் மத்தியில் நடிகர் விஜய்க்கு செல்வாக்கு உள்ளது. இதனால் தான் நடிகர் விஜய் லோக்சபா தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கூட அவர் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக யாருக்காவது ஆதரவு தெரிவிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.
இந்த மவுனத்தின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதால் அரசியலில் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இத்தகைய சூழலில் தேவையின்றி லோக்சபா தேர்தலில் ஏதேனும் ஒரு பிரிவினருக்கு ஆதரவு அளிக்க அது எதிர்காலத்தை பாதித்து விடுமோ? என்று நடிகர் விஜய் நினைத்துள்ளார்.
மேலும் இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு முன்அனுபவம் ஒன்றும் உள்ளது. அதாவது கடந்த 2011 சட்டசபை தேர்தலின்போது திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். நடிகர் விஜயின் இயக்கத்தில் இருந்தவர்கள் அதிமுகவுக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்தனர். ஆனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நடிகர் விஜயை கண்டுக்கொள்ளவில்லை. அதேபோல் திமுகவினரிடமும் நடிகர் விஜய் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
இந்த அனுபவ பாடத்தை வைத்து தான் நடிகர் விஜய் லோக்சபா தேர்தலில் அமைதி காத்துள்ளார். இருப்பினும் நடிகர் விஜயின் இந்த மவுனம் என்பது அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பலரும் நடிகர் விஜய் ஏதாவது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்த காத்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது நடிகர் விஜய் லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பதை வெளிப்படுத்தாத நிலையிலும் கூட அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது அதிக கவனம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க போகின்றனர்? , அவர்கள் செலுத்தும் வாக்கு யாருக்கு சாதகமாக போகிறது? யாருக்கு பாதகமாக போகிறது? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பிறகு 2019 தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவரது கட்சி 36 தொகுதிகளில் போட்டியிட்டார். மொத்தம் 14.75 லட்சம் அதாவது 3.67 சதவீத ஓட்டுகளை வாங்கியது. அந்த வகையில் நடிகர் விஜய் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் சுமார் 20 லட்சம் ஓட்டுகள் வரை பெற்றிருப்பார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறைந்தபட்சம் 4 முதல் 5 சதவீத ஓட்டுகளை அள்ளி இருப்பார் என கூறப்படுகிறது.
ஆனால் நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிடாத நிலையில் இந்த ஓட்டுகள் எந்த கட்சிக்கு செல்கிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயின் ‛தி கோட்' படத்தின் முதல் பாடலுக்கான விஜயின் போஸ்டரில் மைக் சின்னம் இடம்பெற்றிருந்தது. இந்த தேர்தலில் நாம் தமிழரின் சீமான் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனால் நடிகர் விஜய், சீமானுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்தது. இதற்கும் நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications