என்னென்னமோ செஞ்சாச்சு... பயனில்லை.. காற்று வாங்கும் வந்தே பாரத் ரயில்கள்.. என்ன காரணம்?
சென்னை: வந்தே பாரத் ரயில்களில் செல்ல மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. சில முக்கிய வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளை பாதியாக குறைத்தும் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்கைகள் நிரம்பாமல் உள்ளன. அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.அறிவித்தபடியே இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போதைய நிலையில் 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன. இன்னும் 4 வந்தே பாரத் ரயில்கள் புதிதாக இந்த மாதத்திற்குள் இயக்கப்பட உள்ளன.

வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தான் கொடியசைத்து துவக்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் ரயில்கள் வேகமும், அதற்கான கட்டணமும் சாமானியர்களை அந்த ரயில்களில் பயணிக்க வேண்டுமா என்ற யோசிக்க வைத்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
பல வந்தே பாரத் ரயில்கள் வெறும் 8 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதிலும் பயணிகள் வருகை குறைவாகவே இருக்கின்றது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து ஜபல்பூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயிலில் 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஜூன் 29 வரை சராசரியாக 32 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். அதே ரயில் 36 சதவீத பயணிகளுடன் மட்டுமே போபால் திரும்பி உள்ளது.
இதேபோல் கேஎஸ்ஆர் பெங்களூரு - தார்வாட் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் மட்டுமேஇயக்கப்படுகிறது. இதில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் 21 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். ரயில் மீண்டும் இந்தூர் திரும்பிய போது 29 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்திருக்கிறார்கள். டெல்லி காண்ட் முதல் அஜ்மீர் நோக்கி செல்லும் ரயில் 61 சதவீத பயணிகளுடன் மட்டுமே பயணித்துள்ளார்கள். மும்பையில் மட்கான் முதல் சிவாஜி டெர்மினஸ் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 55 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளார்கள். நாட்டில் இயக்கப்படும் பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் குறைவான பயணிகள் மட்டுமே பயணித்து வருகிறார்கள்.
மற்ற ரயில்களை ஒப்பிடும் வந்தே பாரத் ரயில்கள் குறைவான இடங்களில் மட்டுமே நிற்கும். மிக வேகமாக போக வேண்டியஇடத்திற்கு போய்விடலாம். ரயிலும் அதிநவீன வசதியுடன் இருக்கும். ஆனால் நீண்டதூர ரயில் பயணங்கள் செய்யும் நம் மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் ரயிலில் செல்லவே விரும்புகிறார்கள். அதிக கட்டணம் என்றால் ரயில்களில் பயணிக்க விரும்புவது இல்லை.
நாட்டின் மற்றொரு முக்கியமான ரயிலான சதாப்தி ரயிலின் executive பெட்டியில் 500கிமீ-க்கான அடிப்படை கட்டணம் ரூ.1,446. ஆனால், வந்தே பாரத் ரயிலில் இதற்கான கட்டணம் ரூ.1,880 ஆக உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் நான்கு பேர் பயணிக்க வேண்டுமென்றால் ரயிலைவிட குறைவான கட்டணத்தில் அவர்களால் காரில் கூட பயணிக்க முடியும் என்கிறார்கள். சாதாரணமாக 1500 என்று ஒரு வழித்தடத்தில் டிக்கெட் இருந்தால், 4 பேருக்கு 6 ஆயிரம் வரும், மறுபடியும் வர வேண்டும் என்றால் 6 ஆயிரம் கட்டணம் வரும் , மொத்தமாக பார்த்தால் 12 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும்.அவர்கள் காரிலேயே இதை விட குறைவான கட்டணத்தில் போய் வரமுடியும். இதுதான் வந்தே பாரத் ரயிலில் மக்கள் பயணிக்காமல் போக காரணம் என்கிறார்கள்.
இன்னொன்று இரவு நேரத்தில் ரயிலில் சென்று, காலையில் சொந்த ஊரில் இறங்குவது அல்லது, சொந்த ஊரில் இருந்து இரவில் ஏறி, காலையில் வேலை செய்யும் இடத்திற்கு வர விரும்புகிறார்கள், அப்படி வருபவர்கள் ரயிலில் தூங்கியபடி வர விரும்புவார்கள். அப்படியான வசதிகளுடன் ரயில்கள் நீண்ட தூரத்திற்கு இயக்கப்படவில்லை. அப்படி இயக்கினால் மக்கள் வரவேற்பு அதிகமாக இருக்கும் என ரயில் பயணிகள் சொல்கிறார்கள்.

இதனிடையே வந்தே பாரத் ரயிலை மக்கள் புறக்கணிக்கும் நிலையில், புதிய சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் சுற்றறிக்கைபடி, பயணிகள் வருகை 50%க்கும் குறைவாக இருக்கும் வந்தே பாரத் வழித்தடம் மற்றும் பெட்டிகளில் அதிகபட்சம் 25% கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுளளது. வந்தே பாரத் ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றால் தற்போது உள்ள ரயிலில் வேகம் இன்னமும் அதிகரிக்க வேண்டும். தேவையான இடங்களில் மிக நீண்ட தூர வந்தே ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை டெல்லி, மும்பை டெல்லி, டெல்லி கொல்கத்தா, பெங்களூரு - மும்பை, ஹைதராபாத்-டெல்லி போன்ற நீண்ட தூரங்களுக்கு தூங்கும் வசதியுடன் நியாயமான கட்டணத்துடன் வந்தே பாரத் இயக்கப்பட்டால் வரவேற்பை பெறும் என்று சொல்கிறார்கள். அதேநேரம் வந்தே பாரத் மட்டுமின்றி சாமானியர்கள் அதிகம் பயணிக்கும் வகையில் மற்ற ரயில்களையும் அதிகம் இயக்க ரயில்வே முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் பல ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்பு புக்கிங் செய்தால் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் கிடைக்கும். அப்படியான சூழல் தான் ரயில்களில் இருக்கின்றன என பயணிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications