பாஜக தலைவர்கள் சந்திப்பு மேட்டரே வேற.. அவங்க தலையீடே கிடையாது - சட்டுனு மறுத்த ஜெயக்குமார்!
சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரியே, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, சி.டி.ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
கார் இல்லை! ஹவுசிங் போர்டு வீட்டில் தான் குடித்தனம்! அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எளிமை!
அதிமுக சர்ச்சை
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற முழக்கம் மேலாங்கி இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.
அண்ணாமலை சந்திப்பு
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். அதிமுக பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓ.பி.எஸ் உடனும் சந்திப்பு
தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதிமுகவில் கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அடுத்தடுத்து அதிமுக தலைவர்களை பாஜக தலைவர்கள் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேதல்
இந்தச் சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தங்களுக்கு ஆதரவான கட்சிகளுடன் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேசி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிமுக தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார்
இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்திப்பு மேற்கொண்டனர், வேட்பு மனு தாக்கல் செய்யும்போதும் டெல்லிகு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலையிடாது
மேலும், இந்தச் சந்திப்பு முழுக்க முழுக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான ஆதரவு கோரிய சந்திப்புதான். அதிமுக பொதுக்குழு தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதிமுக வலிமையாக உள்ளது. பாஜக எங்கள் கட்சியின் உள்விவகாரங்களில் எப்போதும் தலையிடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவின் முடிவு
மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே பொதுக்குழுவின் ஒட்டுமொத்த முடிவு. அதுவே அதிமுக தொண்டர்களின் விருப்பம். பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றுத்தான் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடிக்கிறார்கள் என்றார், அவர்களும், ஜூலை 11ல் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வருவதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.