மா.சு தெரிவித்த ஒற்றை கருத்து.. நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா அறிக்கையின் பின்னணி என்ன?
சென்னை: நீட் தேர்வு குறித்து இன்னும் அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் நடிகர் சூர்யா ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, 8 வழிச்சாலை உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்ச நட்சத்திரங்கள் குரல் கொடுக்கும் போது தான் அது வலுப்பெறும்.
அந்த வகையில் நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் சூர்யா
அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வால் 3 மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது நடிகர் சூர்யா குரல் கொடுத்தார். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது.
மருத்துவர் கனவு
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என சூர்யா கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பிரதமரிடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
கொரோனா ஊரடங்கு
அத்துடன் கொரோனா ஊரடங்கால் நீட் தேர்வு இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யா நீட் தேர்வு குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த மாணவர்கள் கனவில் நீட் மூலம் தீ வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய சட்டசபை கூட்டத்தில் சட்டம் இயற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
பிரச்சினை
மா சுப்பிரமணியனின் கருத்துக்கு பிறகே சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைத்து கோரிக்கை வைத்து அது பலனிக்காமல் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அது போல் இந்த முறையும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே முந்திக் கொண்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாக கையாள சூர்யா முந்திக் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
நிலைப்பாடு
திரை பிரபலங்களின் அழுத்தத்தால் நிறைய பேர் குரல் கொடுப்பர். இது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு அழுத்தமாக மாறும். எனவே திமுக ஆட்சியில் நீட் தேர்வை எதிர்க்கும் முதல் புள்ளியை சூர்யா வைத்துள்ளார். இதன் பிறகு மாநில அரசின் நிலைப்பாடு போக போகத்தான் தெரியும்.