நைட் மீட்டிங்.. திடீரென மாஜி வீட்டிற்கே காரில் சென்ற எடப்பாடி பழனிச்சாமி.. 45 நிமிடம் -நடந்தது என்ன?
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டிற்கு நேற்று இரவு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென சென்றார். இவர்கள் இருவரும் 45 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நேற்று முதல் நாள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கும் 6வது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ரெய்டில் கே.பி அன்பழகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.87 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6.6 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெய்டை தொடர்ந்து கே.பி அன்பழகன் மீதும் , அவரின் குடும்பத்தினர், உறவினர் மீதும் சொத்துகுவிப்பு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பின் கேபி அன்பழகன் வீட்டிற்கு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்று இருந்தார். நேற்று இரவு திடீரென தனியாக எடப்பாடி பழனிசாமி கேபி அன்பழகன் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். தர்மபுரியில் உள்ள காளிமங்களம் அருகே இருக்கும் கேபி அன்பழகன் வீட்டில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியின் வருகையை அறிந்த அதிமுகவினர் சட்டென அங்கே ஒன்று கூடினார்கள். இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் பலர் கேபி அன்பழகன் வீட்டில் குவிந்து ரெய்டு குறித்து ஆலோசனை செய்தனர். சுமார் 40 நிமிடம் எடப்பாடி பழனிசாமி அங்கு இருந்தார். திடீர் ரெய்டு குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்து இருக்கும் வழக்கு குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் செப்டம்பரில் கேசி வீரமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கேசி வீரமணி
அவரும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். தனக்கு எதிராக பதியப்பட்டு இருக்கும் வழக்கு குறித்து அவர் இதில் பேசியதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ராஜேந்திர பாலாஜியை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சிலர் சந்தித்தனர் . ஆனால் ராஜேந்திர பாலாஜியை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்திக்கவில்லை. அதேபோல் ஓபிஎஸ்சும் ராஜேந்திர பாலாஜியை சந்திக்கவில்லை.

ராஜேந்திர பாலாஜி
இது ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. கட்சி தலைமை இப்படி என்னை கண்டுகொள்ளவில்லையே என்று ராஜேந்திர பாலாஜி வருந்தியதாக தகவல்கள் வந்தன. அதோடு சிறைக்கு சென்று ஒரு முன்னாள் அமைச்சர் வெளியே வந்து இருக்கிறார்.. அவரை கட்சி தலைமை நேரில் பார்க்கவில்லை.. இது சரியில்லை என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

போனில் பேசினார்கள்
இதையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ராஜேந்திர பாலாஜியிடம் போனில் பேசியதாக தகவல்கள் வந்தான். இந்த நிலையில்தான் ராஜேந்திர பாலாஜியை சந்திக்காதது போல கேபி அன்பழகனையும் சந்திக்கவில்லை என்றால் அதிமுக தலைமை மீதான நம்பிக்கையை தொண்டர்கள் இழந்து விடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கருதி இருக்கிறார். இதையடுத்து இபிஎஸ் நேற்று கே.பி அன்பழகனை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர் வீட்டில் ரெய்டு நடந்து இருக்கிறது. இப்போது சந்திக்கவில்லை என்றால் அது நன்றாக இருக்காது.

அதிருப்தி
ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் சில நிர்வாகிகள் மேலும் அதிருப்தி அடைய கூடும்.. எதிர்கட்சித் தலைவராக கட்சியின் முன்னாள் அமைச்சருடன் உடன் இருப்பதே சரியாக இருக்கும்.. கட்சி நிர்வாகிகளுக்கும் அது நம்பிக்கை கொடுக்கும்.. என்று எடப்பாடி பழனிசாமி நேற்று இந்த மீட்டிங்கை நடத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இந்த சந்திப்பிற்கு பின் கட்சியின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் கே.பி அன்பழகன் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications