கவனிச்சீங்களா எடப்பாடியை? ஈயம் பூசன மாதிரி + பூசாத மாதிரி.. பாஜகவே எதிர்பார்க்கல.. நழுவிடுச்சே மீனு
சென்னை: இன்றைய சட்டசபை நிகழ்வு, மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டு போயுள்ளது.. இந்த பரபரப்புக்கு நடுவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கள், மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
பாஜக கூட்டணியை முறித்தபோதும்கூட, அதிமுகவுக்கு இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவுகள் இதுவரை பெரிதாக கிடைக்கவில்லை.. அசாதுத்தீன் ஓவைசி தரப்பு, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தந்திருந்ததே தவிர, கூட்டணிக்கான உத்தரவாதத்தை இதுவரை தரவில்லை.

கூட்டணி: அதாவது, கூட்டணியை பலப்படுத்தும் அளவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு, பெருவாரியாக எடப்பாடிக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.
எனினும், இந்த முறை எப்படியாவது, சிறுபான்மையினர் வாக்கு வங்கியை மீட்டுவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் செல்லுமிடமெல்லாம், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்றைய தினமும் இதே நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்..
நிர்வாகிகள்: அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடமும் பலமுறை விவாதித்தபடியே இருக்கிறாராம் எடப்பாடி.. "கூட்டணி இல்லை என்று அறிவித்தபிறகும்கூட, பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்திருக்கிறோம் என்று திமுக பொய்யாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. அதனால், பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதை மக்களை சந்தித்து சொல்லுங்கள்" என்று அசைன்மென்ட்டும் தந்திருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை இதுவரை விமர்சிக்காதது ஏன்? என்ற கேள்வியை திமுக கூட்டணிகள் கேட்டு வருகின்றன.
ஆளுநர் ரவி: சமீபத்தில், மாஜிக்கள் மீது வழக்கு தொடர தமிழக ஆளுநர் ரவி அனுமதி அளித்திருந்தார்.. இந்த விவகாரம் குறித்துகூட, தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்..
"விசாரணை என்று வந்தால் கண்டிப்பாக கைது நடவடிக்கை நடக்கும். அது நமக்கு சிக்கல்தான். இது மற்றவர்களை நோக்கியும் பாயும். அதில் நானும் கூட விதிவிலக்கல்ல.. அதேசமயம், ஒரே ஒரு நன்மை நமக்கு கிடைத்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக நாம் சொல்வதற்கும், அதை மக்கள் நம்புவதற்கும் வசதியாக இருக்கும்.
திமுக அரசு: சிறுபான்மையினர் இனி நம்மை முழுமையாக நம்புவார்கள். "அதிமுக -பாஜக சீக்ரெட் டீலிங்" கில் இருப்பதாக திமுக பரப்புவரும் பொய்ப் பிரச்சாரத்தையும் கவர்னரின் கையெழுத்து உடைத்து விட்டது. தெரிந்தோ தெரியாமலோ நமக்கு நன்மை செய்துள்ளது மத்திய அரசு." என்றாராம் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு பிறகு திடீரென, பாலஸ்தானம் மீது தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.. அதில், "உலக நாடுகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்துக்கு உரியது. பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்று சொல்லி, லோக்கல் பாலிட்டிஸில் இருந்து இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ் பக்கம் தாவினார் எடப்பாடி.
அறிக்கைகள்: எடப்பாடியின் இந்த திடீர் அறிக்கைக்கும் சில காரணங்கள் சொல்லப்பட்டன.. அதாவது, இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவாக இருந்து வருவதால், பாஜக மீது முஸ்லிம்கள் வருத்தத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.. இந்த நேரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருவது, இஸ்லாமியர்கள் மீதான நம்பிக்கையை பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தாராம்..
அத்துடன், பாஜக மீதான எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்றும், இதன்மூலம், "பாஜகவை நாங்களும் கண்டிக்கிறோம்" என்பது போன்ற ஒரு பிம்பத்தை பதிவு செய்ய முடியும் என்றும் கணக்கு போட்டுத்தான், பாஜகவை கடுமையாக எதிர்க்காமலும், அதேசமயம் மேலோட்டமாக விமர்சிப்பது போலவும், தெரியவேண்டும் என்பதற்காகவே, பாலஸ்தீன அறிக்கையை வெளியிட்டதாக சொன்னார்கள்.
சட்டசபை : இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் சட்டசபை நிகழ்வுகள் பரபரப்பை கிளப்பிவிட்டன.. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி புறக்கணித்ததுடன், 4 நிமிடத்திலேயே உரையை முடித்துக்கொண்டார்.. இது தொடர்பாக செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார்கள்..
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள பிரச்சினை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் எதிர்க்கட்சி" என்றார். எடப்பாடியின் இந்த பேட்டிதான், தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது.
வெளிப்படைத்தன்மை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தினந்தோறும் சொல்லி வரும் எடப்பாடி பழனிசாமி, இதுவரை ஆளுநர் சம்பந்தமான எந்த கருத்தையும் முன்வைத்ததில்லையே ஏன்? வெளிப்படையாக விமர்சித்ததும் இல்லையே ஏன்? பாஜக தலைவர்களையோ, பாஜகவின் கொள்கைகளோயோ, பாஜக அரசின் திட்டங்களையோ, இதுவரை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது இல்லையே ஏன்? என்று திமுக தொடர்ந்து சீண்டி கொண்டிருக்கிறது..
அவ்வளவு ஏன்? ஆளுநர் பேசிய ஆரிய-திராவிட சித்தாந்த கருத்துக்குகூட எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவில்லையே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில், இன்றைய சட்டசபை நிகழ்வு விவகாரத்திலும், ஆளுநர் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாமல் நழுவியுள்ளது மீண்டும் சலசலப்பை கூட்டி உள்ளது.
நழுவுகிறாரா: "ஈயம் பூசியது போலவும் இருக்கணும், பூசாதது போலவும் இருக்கணும்" என்ற யுக்தி, எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கலையே தந்துவிடும் என்றும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் வெடிக்க துவங்கியிருக்கின்றன.
தேர்தல் நெருங்கி வரும்சூழலில், பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்றாலும், அதிமுகவுக்கு இவைய்லலாம் வாக்குகளாக மாறுமா? சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அதிமுகவுக்கு சாதகமாக விழுமா? திமுகவுக்கு மெஜாரிட்டியாக இருக்கும் சிறுபான்மை ஓட்டுக்களை, அதிமுகவால் உடைக்க முடியுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications