சென்னை குதிரைகளுக்கு மைக்ரோ சிப்.. தொடங்கி வைத்த கிருத்திகா உதயநிதி.. என்ன நன்மை தெரியுமா?
சென்னை: விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, சென்னை மெரினாவில் உள்ள சவாரி குதிரைகளின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக 'மைக்ரோ சிப்' பொருத்தும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். குதிரைகளுக்கு மைக்ரோ சிப் பொறுத்துவதால் என்ன நன்மை என்பது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஸ்ருதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் கடலில் காற்று வாங்கும் மக்கள் ஒரு புறம் எனில், கடற்கரையில் குதிரை சவாரி செய்வதும் மக்களுக்கு பிடித்தமான விஷயம் ஆகும்.மெரினாவிற்கு வரும் பல சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்கிறார்கள். மெரினாவில் உள்ள குதிரைகள் திருமண ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளும் அழைத்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் இந்த குதிரைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்று புகார்களும் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்திருக்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தமிழ்நாடு காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குதிரைகளுக்கு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடத்தின.
இந்த முகாமில், இந்த குதிரைகளுக்கு ஆண்டுதோறும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா? உடல்நிலை எவ்வாறு உள்ளது? என்பதை கண்டறிவதற்காக 'மைக்ரோ சிப்' பொறுத்தப்பபட்டது. இந்த திட்டத்தை விலங்கு நல ஆர்வலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய கிருத்திகா உதயநிதி ,"உதயநிதி இங்கு (சேப்பாக்கம் தொகுதி) எம்எல்ஏவாக வந்த பின்னர்தான், 'இந்த குதிரைகளுக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டறிந்தோம். கொரோனா காலகட்டத்தில் இந்த குதிரைகளை வளர்க்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்தோம். தற்போது இந்த குதிரைகளுக்கு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். சென்னையில் 200 குதிரைகளுக்கு மைக்ரோ சிப் பொறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குதிரைகளுக்கு சிப் பொறுத்தும் இந்த திட்டம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஸ்ருதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " இந்த சிப் என்பது ஒவ்வொரு குதிரைக்கும் தனி ஐடி மாதிரி.. இதை ஒவ்வொரு குதிரைக்கும் போட்டுக் கொண்டோம் என்றால், இந்த குதிரை பற்றிய தகவல்கள், குதிரையின் ஓனரை பற்றிய தகவல்கள்,குதிரை எங்கு உள்ளது. குதிரைக்கு கடைசியாக எப்போது தடுப்பூசி போட்டார்கள், எதாவது நோய் வந்திருக்கிறது என்றால் அதுபற்றி தகவல்கள் முழுமையாக எங்களுக்கு பதிவாகி விடும்.
அடுத்த 3 மாதத்திற்கு பிறகு செக் பண்ணும் போது, அந்த யுனிக் ஐடியை வைத்து குதிரையை பற்றிய எல்லா தகவல்களையும் எங்களால் அறிய முடியும். இந்த சிப்பினை ஊசி மூலமாக மருத்துவர்கள் குதிரையின் உடலில் உள்ளே செலுத்துவார்கள். அதில் கருவியை வைத்து சோதித்தால் யுனிக் ஐடி நம்பர் வந்திருக்கும். அதை வைத்து குதிரையின் தகவல்களை சாப்ட்வேரில் பதிவிட்டு 3மாதம் ஒரு முறை தேவையான சிகிச்சை அளிப்போம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications