கவனிச்சீங்களா? பாஜக கூட்டணி முறிவை பற்றி எடப்பாடி மட்டும் வாயே திறக்கவில்லை.. ஒதுங்கி இருப்பது ஏன்?
சென்னை: அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முறிந்த நிலையில்.. இதுவரை அதை பற்றி ஒருவார்த்தை கூட பேசாமல் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மிக கடுமையான நெருக்கடியில் கூட ஒன்றாக இருந்த இரண்டு கட்சிகள். சட்டசபை, லோக்சபா தேர்தலில் கருத்து கணிப்புகள் எதிராக வந்த போது கூட ஒன்றாக இருந்த கட்சிகள். பல்வேறு மசோதாக்களில்.. ஏன் கிட்டத்தட்ட எல்லா மசோதாக்களிலும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக குரல் கொடுத்த கட்சிகள் பாஜகவும் அதிமுகவும்.

பிரிக்க முடியாதது.. பாஜகவும் அதிமுகவும் என்று சொல்லும் அளவிற்கு இரண்டு கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. ஆனால் தற்போது இவர்களின் கூட்டணி முறிந்துவிட்டது. நேற்று முதல்நாள் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவில் கூட்டணியை முறித்துக்கொள்வதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.
கவனிக்க வேண்டிய விஷயம்: ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. இந்த கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பு எதிலும் எடப்பாடி பழனிசாமி நேரில் தலையிடவே இல்லை. முதலில் கூட்டணி முறிந்துவிட்டது. பாஜக - அதிமுக இடையே எங்களுக்கு உறவு இல்லை என்று கூறியது ஜெயக்குமார்.
இதுதான் கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு என்று கூறினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி எதையும் சொல்லவில்லை. அடுத்து அதிமுக கட்சி கூட்டம் நடந்தது. இதிலும் கூட எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி பிரிவை பற்றி பேசியதாக தெரியவில்லை.
பாஜகவுடன் கூட்டணி இல்லை . பாஜக தலைவர் நம்மை அவமதித்து விட்டார். பாஜகவுடன் 2024ல் கூட்டணி இல்லை. 2026லும் கூட்டணி இல்லை. அதோடு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை அதிமுக தலைவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் மிக முக்கியம், என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக செய்திகள் வந்தன.
அதிமுக கூட்டத்தில் அவர் இப்படி கூறியதாக செய்திகள் வந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமி உண்மையில் அப்படி கூறினாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அதிகாரபூர்வமாக கூட்டணி அறிவிப்பை அவர் வெளியிடவில்லை.
மாறாக அவைத்தலைவர் தமிழ்மகன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுச்செயலாளர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். மேலே சொன்னது போல பிரிக்க முடியாமல் நெருக்கமாக இருந்த பாஜகவுடனான உறவை அறுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இதை எடப்பாடி பழனிசாமிதான் அறிவித்து இருக்க வேண்டும்.
ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யாமல் இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்கிறார். அவரின் இந்த செயல் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏன் இதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இல்லை. பொதுவாக அதிமுக அறிக்கையில் கீழ் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி என்று போட்டு அதன் மேலே பச்சை நிறத்தில் அவரின் கையெழுத்து இருக்கும்.
ஆனால் இங்கே அப்படி இல்லை. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலின் பெயரில் கூட்டணி முறிவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் எடப்பாடி கையெழுத்து இல்லை.. வாய் வழியாக பேசவில்லை.. கையெழுத்தும் இல்லை.. எடப்பாடி இந்த கூட்டணி விஷயத்தில் இப்படி ஒதுங்கியே இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications