காலையிலேயே வந்துட்டாங்க ராஜேஸ்வரி பிரியா.. யாரை ஏமாத்த பார்க்குது திமுக? இன்று சென்னையில் ஐபிஎல் வேற
சென்னை: தேர்தல் நேரத்தில் யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? என்று கேள்வி மேல் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா.. இதெல்லாம் கேட்டு திமுகவினர் கடுப்பாகி உள்ளனர்.. என்ன நடந்தது?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் இன்று தொடங்குகிறது.. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தீவிரமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்..
ஐபிஎல்: இந்த வருட ஐபிஎல் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. முதல் நாளிலேயே ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத போகின்றன.. ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் துரிதமாகவே நடைபெற்று வருகின்றன..

இப்படிப்பட்ட சூழலில்தான், ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழக அரசு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்: மேலும் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு, போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும், சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்குச் செல்லலாம் என்றும் இந்த சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு சலுகையை அறிவித்ததுமே, முதல் ஆளாக வந்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளர் ராஜேஸ்வரி பிரியா... தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது.. தேர்தல் விதிமுறைகளும் அமலில் உள்ளன.. அப்படியிருக்கும்போது, இந்த சலுகையை அறிவித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தேர்தல் ஆணையம் என்னதான் செய்கிறது? என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா..
அறிவிப்பு: அந்த அறிக்கையில், தனியார் நிறுவனம் நடத்தும் IPL கிரிக்கெட் போட்டிக்கு எதற்காக இலவச பேருந்து கொடுக்க வேண்டும்? தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு இந்த அறிவிப்பு விதிமீறல் இல்லையா?ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி கிரிக்கெட் பார்க்க வருபவர்களுக்கு ஏன் இலவச பஸ்?கிரிக்கெட் ரசிகர்களை திருப்திபடுத்த மக்களின் வரிப்பணம் பயன்படுத்தபடுவது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
தேர்தல் நேரத்தில் யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? 2021 தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 டீசல் ரூ.4 குறைக்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு அதனை நிறைவேற்றினீர்களா? மக்கள் எப்போதும் ஏமாந்தவர்கள்தானா திமுகவினரின் பார்வையில்? என்று கேட்டுள்ளார்.
துணிச்சல் கேள்வி: வழக்கமாக, திமுக அரசின் செயல்பாடுகளை சரமாரியாகவும், தயவுதாட்சண்யமின்றியும் விமர்சிப்பவர் ராஜேஸ்வரி பிரியா.. ஆளும் தரப்பின் நடவடிக்கைகள் எதுவானாலும் அவைகளை துணிச்சலுடன் தட்டிக்கேட்டு கேள்விகளை எழுப்பி வருபவர்..
தற்போது, தேர்தல் நேரத்தில் இலவச பேருந்து என்ற அறிவிப்பை வெளியிடவும், மற்ற எதிர்க்கட்சிகளைவிடவும், முந்திக் கொண்டு வந்து கேள்விகளை கேட்டுள்ளார்.. ராஜேஸ்வரி பிரியாவின் இந்த தாறுமாறு கேள்விகளை கண்டு திமுக கடுப்பாகி உள்ளது.. இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications