"எங்களை கூப்பிடாதீங்க".. திடீரென முடிவெடுத்த ஓபிஎஸ் - இபிஎஸ்.. விவாதங்களுக்கு குட்பை.. என்ன நடந்தது?
சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கூடாது என்று அதிமுக எடுத்த முடிவிற்கு பின் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல கட்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை அதிமுக எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவின் புகழுக்கும், அதிமுக தலைவர்களின் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும், இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் விவாதங்கள் நடப்பதாக கூறி, அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது.

அறிக்கை
அதிமுக வெளியிட்டு உள்ள இந்த அறிக்கையில், கழக தலைவர்களின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தலைப்புகளை வைத்து விவாதங்களை நடத்துகிறார்கள். எங்களுக்கு இது மன வருத்தத்தை கொடுக்கிறது. எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் அதிமுக இனி ஊடக விவாதங்களில் ஈடுபடாது.

விவாதம்
அதோடு எங்களின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டும் யாரையும் ஊடக விவாதங்களில் அடையாளப்படுத்த வேண்டாம்.அதிமுகவின் பெயரை எந்த வகையிலும் பிரதி பலிக்கும் வகையில் யாரையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டாம், என்று அதிமுக வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டு விஷயங்கள் காரணமாக அதிமுக இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

சசிகலா
நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது தொடர்பாக நடத்தப்பட்ட சில டிவி விவாதங்கள் காரணமாக, அக்கட்சி கோபம் அடைந்ததாகவும், சசிகலா அரசியல் குறித்த சில விவாதங்கள் தலைப்புக்கள் அதிமுக தரப்பை இந்த முடிவிற்கு தள்ளியதாகவும் கூறப்படுகிறது. சசிகலா குறித்தும், அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்தும் செய்யப்பட்ட டிவி விவாதங்களை எதிர்க்கும் விதமாக அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

சசிகலா
இது போக இன்னொரு பக்கம் தொலைக்காட்சி விவாதங்கள் சிலவற்றில் அதிமுக ஆதரவாளர்கள் என்று வரும் சிலர் திடீரென சசிகலாவிற்கு ஆதரவாக பேசும் சம்பவங்களும் நடந்து உள்ளன. இந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. அதிமுக என்ற பெயரில் வந்துவிட்டு, பாதி விவாதத்தில் சிலர் சசிகலாவிற்கு ஆதரவாக பேசுவதை கட்சி தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கோபம்
இது கட்சிக்குள்ளும் சர்ச்சையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் இனி விவாதங்களில் அதிமுகவினரும், அதிமுகவினர் ஆதரவாளர்கள் என்ற பெயரில் யாரும் பங்கேற்க கூடாது என்று அக்கட்சி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு இது தேவையில்லாத சர்ச்சை என்பதால் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது. சசிகலா ஆடியோ தொடர்பாக கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்டு வந்த விவாதங்களை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன












Click it and Unblock the Notifications