உதயநிதி ஸ்டாலின் கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? ‘லாக்’ செய்யும் அதிமுக!
சென்னை: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரை பார்க்கச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போது ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சார்பாக கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக, சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

டாஸ்மாக் ரெய்டு
சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லம், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லம் மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
அமலாக்கத்துறை வளையத்தில்
ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தற்போது வரை ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை. டாஸ்மாக் துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன் என்றும், அவருக்கும் திமுகவின் உயர்மட்ட புள்ளிகளுக்கும் என்ன தொடர்பு என்றும் அதிமுக தரப்பில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் உடன்
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரை பார்க்கச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போது ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெயக்குமார், "தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி. கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி.
— DJayakumar (@djayakumaroffcl) May 21, 2025
கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு?
உதயநிதி ஆகாஷ்… pic.twitter.com/ikpb97uYEz
செந்தில் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு?
உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடித் தேடி அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு? மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியது என்பது வெட்ட வெளிச்சமாகிறது!" எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழி. கவின் கேர் நிறுவன உரிமையாளர் சி.கே.ரங்கநாதன் - தேன்மொழி தம்பதியின் மகள் தாரணி. இவரைத் தான் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தான் திரையுலகில் தற்போது பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications