விஜய் அழைத்தது ஏன்? கட்சியில் என்ன பதவி? சீமானுடன் கூட்டணியா? அய்யநாதன் விளக்கம்
சென்னை: தவெகவில் இணைவது பற்றியும் அந்தக் கட்சியில் தனது பதவி என்ன என்பது பற்றியும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் மழைக் காலம் தொடங்கி இருப்பதால் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. அந்தச் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருந்த விஜய், அவர்களைக் காண்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆக, வரும் 27 ஆம் தேதி தவெக மாநாடு உறுதியாக நடக்கும் என்றே தெரியவந்துள்ளது. கட்சியின் முதல் மாநாடு என்பதால் பலதரப்பு மக்கள் அதைப் பற்றி ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்கிடையில் கடந்த 18 ஆம் தேதி 2 ஆயிரம் நிர்வாகிகளை அழைத்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் முதல் அரசியல் பயிலரங்கு ஒன்றை நடத்தி இருக்கிறார் விஜய். அந்தக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தை எப்படி நெறிப்படுத்துவது? வாகனங்களை எப்படி விதிமுறை மீறாமல் மாநாட்டுக்கு வருவது? எந்த மாதிரியான பாதுகாப்பு வசதிகளில் கவனம் செலுத்துவது எனப் பல கோணங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில் முதன்முறையாக தவெக சாராத பத்திரிகையாளர் அய்யநாதன் கலந்துகொண்டு பேசி இருந்தார். அவர் தவெகவில் இணையப் போவதாக உடனே தகவல்கள் கசிந்தன. இது குறித்து அய்யநாதன் வழங்கி இருக்கும் பேட்டியில் தனது நிலைப்பாட்டை விரிவாகப் பேசியிருக்கிறார்.
அவர், "விஜய் கட்சி தொடங்கியதாக அறிவித்த பிறகு ஒரு டிரெண்ட் இருப்பதைக் கவனித்தேன். விஜய்க்கு என்ன தெரியும்? அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? இப்படி மிகக் கடினமாகவே பலரும் விமர்சித்தனர். விஜய் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை அரசியலுக்கு அழைத்து வருகிறார். அதை நான் நேர்மறையாகப் பார்க்கிறேன். அவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதைத் தாண்டி கூட இருக்கலாம்.
ஆனால், விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் இத்தனை லட்சம் இளைஞர்களும் தமிழக அரசியலுக்கு எந்தவித பங்களிப்பையுமே செய்யாமல் போய்விடுவார்கள். இதுவரை இந்த ரசிகர்கள் வேறு எந்தக் கட்சிக்கோ வாக்களித்திருப்பார்கள். அது இனி உடைய போகிறது. திமுக தொடங்கி பாஜகவரை இதனால் இழப்பு ஏற்படும். எனவே விஜய் வருகிறார் என்றதும் எதிர்க்கிறார்கள்.
தனது சக்தியை வீண் அடித்துவிடாமல் அரசியலுக்கு அவர்களை அழைத்து வந்துள்ளார் விஜய். அது தமிழ்நாட்டு அரசியலுக்கு நிச்சயம் நன்மை செய்யும் என நான் நினைக்கிறேன். தவெக நிர்வாகிகள் மத்தியில் நான் விவாதித்த வரை விஜய்யிடம் ஒரு மென்மையான தமிழ்த் தேசிய கொள்கை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்பதில் வெற்றி என்ற சொல்லுக்கு விஜய் நிர்வாகிகளிடம் அளித்துள்ள என்னவென்றால் அது தமிழ்நாட்டின் நலன்களின் நம் மாநிலம் வெற்றியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்கிறார்.
விஜய் நினைத்திருந்தால், கொடி அறிமுகம் செய்த அன்றே கட்சியின் கொள்கையை வெளியிட்டிருக்க முடியும். அவர் அப்படிச் செய்யவில்லை. முதலில் அறிமுகம். அடுத்து கொள்கை திருவிழா. அதில் கொள்கை அறிவிப்பு எனப் படிப்படியாகத் தொண்டர்களை அரசியல் மயப்படுத்துகிறார். கொள்கையைப் புத்தகமாக வெளியிடப்போகிறார் என அறிகிறேன்.
தவெகவையும் விஜய்யின் சிந்தனைப் போக்கைப் பற்றியும் தொடர்ந்து நான் பேசி வந்தேன். அதை விஜய் கவனித்திருக்கிறார். தனது சிந்தனைப் போக்கை இவர் தெளிவாக முன்வைக்கிறார் என்று கூறி நிர்வாகிகளை என்னைச் சந்திக்கும்படி தெரிவித்திருக்கிறார். ஆகவே, என்னை அழைத்தார்கள். அப்போது நான் அழைத்த நிர்வாகியிடம், 'விஜய்க்கு முன்பாக உள்ள சவால் என்னத் தெரியுமா? அவரது ரசிகர்களை அரசியல் மயப்படுத்துவதில் தான் அவரது வெற்றி இருக்கிறது' என்றேன். அதைக் கேட்டுக் கொண்டு போனவர் சேலத்தில் அரசியல் பயிலரங்கு வைத்துள்ளோம். வாருங்கள் என்றார்.
அங்கே போனபோது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில கோரிக்கைகளை வைத்து அதற்கு முக்கியத்துவம் அளிக்கும்படி பேசுங்கள் என்றார். நான் அதற்குப் பதிலாக தவெகவுக்கு தமிழக அரசியலில் இடம் இருக்கிறதா? என்பது பற்றி பேசப் போகிறேன் என்றேன். அவர் உடனே ஏற்றுக் கொண்டார். இதுதான் தவெகவின் முதல் களப்பணி. நிர்வாகிகள் மத்தியில் இந்தப் பயிலரங்கு நடந்துள்ளது. அடுத்து தொண்டர்கள் மத்தியில் நடைபெற வேண்டும்.
விஜய்யுடன் நான் சேர்ந்து நிற்பதாக இருந்தால், தவெகவுடன் இணைந்து நிற்பதாக இருந்தால் என ரோல் என்னவாக இருக்கும் என்றால், இயக்கத்தைப் பலப்படுத்துவதிலும் மக்களிடம் அமைப்பைக் கொண்டு செல்வதிலும்தான் இருக்கும். ஒருவரை இயக்கி அதன் மூலம் நம் கொள்கைகளை நிறைவேற்றலாம். நானே செய்ய வேண்டும் என்பது இல்லை. யாருடனும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. விஜய் தனித்து நின்று சாதிப்பார். அவரிடம் நிதானமான ஒரு அரசியல் பார்வையுள்ளது" என்கிறார். தவெக மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பியதற்கு, 'நிர்வாகிகள் அழைத்தார்கள். விஜய் அழைத்தால் பங்கேற்பேன்' என்கிறார்.












Click it and Unblock the Notifications