ராவுத்தர் - விஜயகாந்த் பிரிவுக்கு காரணம் இதுதான்.. மகன் சொன்ன உண்மை
சென்னை: விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் நட்பைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் விஜயகாந்த்திற்கும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையே ஆன நட்பைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒரு காவிய நட்பாக அதைப் பலரும் சொல்வார்கள்.

இந்த இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் தனி சகாப்தமே நடத்தினார்கள். அந்தளவுக்கு மதங்களைக் கடந்த மனிதநேயமாக இவர்களின் நட்பு இருந்தது.
விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு இந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது. இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் கருத்து முரண்பாட்டால் தள்ளி நின்றார்கள். இப்போது இருவருமே இல்லை.

இப்ராஹிம் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் நட்பு பற்றி இப்போது நிறையப் பேர் பேசுகிறார்கள். அதையொட்டி ராவுத்தர் மகன் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"அவர் உடல்நிலை சரி இல்லாதபோது நான் போய் பார்க்கவே இல்லை. அவரது வீடியோக்களைப் பார்க்கும் போது நான் உடைந்துபோய்விட்டேன். அவரை நேரில் சந்திக்கும் தைரியம் எனக்கு இல்லை.
ஆகவே போகவே இல்லை. நான் போய் இருக்க வேண்டும். அது என் தவறுதான். அதை நியாயப்படுத்த விரும்பவில்லை" என்கிறார் இப்ராஹிம் ராவுத்தர் மகன் முகமது அபுபக்கர்

தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கைதான் அந்த நட்புக்கு காரணம். இருவரும் உண்மையாகப் பழகினார்கள். அதில் கொஞ்சம் கூட சுயநலம் இருக்கவில்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து போனார்கள். ஆனால் சண்டை எதுவும் போட்டு கொண்டதில்லை. எதிரியாக இருக்கவில்லை. ஒரு கட்டத்திற்குப் பின் பிரிந்து இருப்போம் என்று முடிவு எடுத்துப் பிரிந்துபோனார்கள்.
விஜயகாந்த் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் மாறி மாறி ஆட்கள் வேலை செய்தார்கள். எங்கள் கம்பெனியில் உள்ள டிரைவர் அவர் வீட்டுக்கும் டிரைவராக இருப்பார்.

அங்கு வேலை இல்லாதபோது எங்கள் கம்பெனிக்கு வருவார்கள். அப்பாவும் கேப்டனும் பிரிந்தார்களே தவிர, பணியாட்கள் அப்படியேதான் இருந்தார்கள். அவர்களுக்குள் எந்தப் பிரிவும் வந்ததில்லை.
அப்பாவும் கேப்டனும் பிரிந்ததற்குக் காரணம், அவர்களுக்கு எந்த சண்டையும் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அப்பா கருத்து வேறாக இருந்தது. ஆகவே, அவர் அமைதியாக இருந்துவிட்டார். கேப்டன் விருப்பம் என்னவோ அதன்படி அவர் இருந்தார்.

விலகிய பிறகு கூட அப்பா, கேப்டனைப் பற்றி விசாரித்துக்கொண்டுதான் இருந்தார். அவர் ஒழுங்கா எக்ஸர்சைஸ் செய்கிறாரா? உடல்நலத்தில் அக்கறை காட்டுகிறாரா? என அங்கிருந்து வரும் நபர்களிடம் கேட்டுக் கொண்டேதான் இருந்தார். கேப்டனும் அப்பாவை விசாரித்துக் கொண்டுதான் இருந்தார். கடைசி வரை அந்த விசாரிப்பு இருவருக்கு இடையிலும் இருந்தது.
அடிக்கடி எங்கள் மேனேஜரிடம் போன் பண்ணி கேப்டன் விசாரிப்பார். அப்பா மருத்துவமனையில் இருந்த போதுகூட விசாரித்துக் கொண்டே இருந்தார். மருத்துவமனைக்கும் வந்தார். அப்பாவுக்குச் சுயநினைவு இல்லை. ஆனால், விஜி வந்திருக்கிறேன். விஜி வந்திருக்கிறேன் என்று அப்பா பக்கத்தில் உட்கார்ந்து அழுதார்.

நான் கூட அப்பா உங்க ஃபிரெண்ட் வந்திருக்கிறார். பேசுங்கப்பா என்று சொன்னேன். அவரால் கேட்க முடிந்தது. ஆனால், பேச முடியவில்லை. அவரது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்கள் கூட, கேப்டன் பேச்சுக்கு உங்கள் அப்பா ரெஸ்பான்ஸ் செய்கிறார். தைரியமாக இருங்கள். அவரைக் காப்பாற்றி விடலாம் என்றே சொன்னார்கள்.
மறுநாள் அப்பா மறைந்துவிட்டார். உடனே கேப்டன் வந்தார். கண்கலங்கி நின்றார். அவரால் அந்த இழைப்பை ஜீரணிக்க முடியவில்லை.
அதன்பின்னர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, 'உன் அப்பன் எப்படி உன்னை வளர்த்திருப்பான் என்று எனக்குத் தெரியும். ஒழுக்கமாக இரு. எதற்கும் பயப்படாதே. நன்றாக வருவ' என்று ஆறுதல் சொனார்.

அதன்பின்னர் அவருக்கே உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதை டிவியில் பார்த்த போது நான் கண்கலங்கி நின்றேன். அவரது கை என் shoulder அளவுக்கு பெரியதாக இருக்கும். அவர் அன்பாக என் கன்னத்தைப் பிடித்தாலே அது அப்படி வலிக்கும். அந்தளவுக்கு அவர் பலசாலியாக இருந்தார். அந்த உடம்பே எங்கே போனது என்றே தெரியவில்லை.
நான் பயங்கர குண்டாக இருந்தேன். அவர் சொல்லித் தான் சிலம்பம் கற்கப் போனேன். அவர் அடிக்கடி உடம்புதான் முக்கியம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவரைப் பார்த்துத்தான் நான் ஃபைட் கற்றுக் கொண்டேன். எனக்கு அவரது ஆக்ஷன் காட்சிகள் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

நான் அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். ஒரு நண்பன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை அப்பாவையும் கேப்டனையும் வைத்துத்தான் நான் கற்றுக் கொண்டேன்.
எங்கள் ராவுத்தர் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் அவருக்கு என்றே தனி அறை இருந்தது. ஷூட்டிங் இல்லாத போது கேப்டன் இங்குதான் இருப்பார். அப்பாவும் அவரும் ஒன்றாக இங்கேதான் இருப்பார்கள்.

பல முறை அவர் மருத்துவமனைக்கு உடல் செக் அப் செய்வதற்காகப் போவார். மீண்டும் வந்துவிடுவார். இந்த முறை அவர் மருத்துவமனை போகும்போது அப்படியே திரும்பி விடுவார் என நம்பினேன். ஆனால், அது நடக்கவில்லை.
மறைவுக்கேட்டு போனபோது பிரேமலதா அம்மாகிட்ட, கேப்டன் உடலைக் காட்டி அழுதார். அவரது கண்களைப் பார்த்தேன். என்னால் பார்க்கவே முடியவில்லை" என்கிறார்












Click it and Unblock the Notifications