அதிமுகவை பலவீனப்படுத்தவே தனித்து போட்டி என களமிறக்கப்படுகிறதா தேமுதிக?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கத்தில்தான் தேமுதிக தனித்துவிடப்படுகிறதா? என்கிற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் வெறும் 13 இடங்கள் பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என சொன்னது அதிமுக.
இதனை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தேமுதிக. இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகள், சந்தேகங்களை எழுப்புகின்றன.

திடீர் முடிவு
ஒவ்வொரு தேர்தலின் போதும் ராஜ்யசபா சீட் பேரம் பேசிய கட்சி தேமுதிக. இதை இப்போது அதிமுக ஏற்றுக் கொண்டது. இதை சுதீஷும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இப்போது திடீரென ராஜ்யசபா சீட்டும் வேண்டாம் கூட்டணியும் வேண்டாம் என்கிறது தேமுதிக.

அதிமுக மீது விமர்சனம்
அத்துடன் இல்லாமல் அதிமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்கிறது தேமுதிக. சட்டசபை தேர்தலில் நிச்சயமாக அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து தேமுதிகவினர் களம் காணப் போகிறார்கள். இது பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பெறும் தொகுதிகள் எண்ணிக்கையை வெகுவாகவே குறைத்துவிடும்.

அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சி
அதிமுகவின் இமேஜும் மிக மோசமாக பாதிக்கப்படும். அதிமுகவை மிக மிக மோசமாக பலவீனப்படுத்தும் வகையில்தான் தேமுகவின் இந்த நடவடிக்கை தெரிகிறது. ஒருவேளை அதிமுக அப்படியான ஒரு நிலைக்கு போவதுதான் தங்களுக்கு நல்லது என நினைக்கும் சக்திகளால் தேமுதிக இப்படி ஒரு முடிவை எடுத்ததோ என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றன.

திட்டமிட்டு களமிறக்கப்படும் தேமுதிக
ஏனெனில் காங்கிரஸ் கட்சி 25, பாமக 23, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இடதுசாரிகள் தலா 6 இடங்களில்தான் போட்டியிடுகின்றன. மதிமுகவும் 6 இடங்களில் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனடிப்படையில் 13 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என்பது ஒன்றும் கவுரவ குறைச்சலான எண்ணிக்கையாகவும் தெரியவில்லை. அதனால்தான் அதிமுகவுக்கு எதிராக திட்டமிட்டே தேமுதிக களம் இறக்கப்படுகிறதா?என்கிற சந்தேகம் எழுகிறது.












Click it and Unblock the Notifications