ஆமா.. திமுக ஏன் "இந்த" விஷயத்தில் வாயே திறக்கவில்லை.. கமல்கூட சைலண்ட்டாக இருக்கிறாரே ஏன்??
விஜய் விவகாரத்தில் திமுக ஏன் மவுனம் காக்கிறது என்று தெரியவில்லை
சென்னை: விஜய்யின் 100 சதவீத தியேட்டர் விவகாரத்தில் திமுக ஏன் வாய் திறக்காமல், எந்த வித கருத்தையும் சொல்லாமல் உள்ளது என்ற பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய்யை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே திமுகவின் ஆதரவாளராகவே தென்பட்டார்.. அதற்கு காரணம், சன் பிக்சர்ஸில் நிறைய படம் விஜய் நடித்ததாக இருக்கலாம்.. அல்லது அவரது அப்பா எஸ்ஏசி திமுகவின் அபிமானி என்பதாலும் இருக்கலாம்.
அதற்கேற்றவாறு சர்க்கார் படம் ரிலீஸ்-ன்போது, தமிழக முதல்வரை டார்கெட் செய்தே சில சீன்களை புகுத்தியிருந்ததும், அதையொட்டி சர்ச்சைகள் எழுந்ததும் யாவரும் அறிந்ததே.. அதிமுகவை நேரடியாக பகைத்து கொள்வது என்பது சர்க்கார் படத்திலேயே தெரிந்தது. இதற்கு பிறகு விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பிறகு விஜய்க்கு நேரடியாக காங்கிரஸ் ஆதரவு தந்தாலும், திமுக தலைவர்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்ததையும் மறுக்க முடியாது.
திமுக
இப்படியெல்லாம் கடந்த காலங்களில் இருந்துவிட்டு, இன்று தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு போயுள்ளார் விஜய்.. இதனால் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்கும் என்றாலும், ஒரு சிலரின் நன்மைக்காக, தொற்று சமயத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை தரும் போக்கை யாருமே விரும்பவில்லை. விஜய் வாய்விட்டு கேட்டதற்காக முதல்வர் இந்த உதவியை செய்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதிரடி
100 சதவீத தியேட்டர்களின் இருக்கைக்கு அனுமதி என்பதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்த அதிரடியை அதிமுகவுக்கு எதிராக பாஜக செயல்படுத்துகிறதா? அல்லது விஜய்க்காக சாட்டையை மறுபடியும் சுழட்டுகிறதா என்று தெரியவில்லை.. ஆனால், விஜய்க்காக முதல்வர் ஓகே சொன்னதற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய்
மக்களுக்கு இதனால் பாதிப்பு வரும் என்பதால்தான் மொத்த பேரும் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.. ஏன், டாக்டர்களே வீடியோ வெளியிட்டு, இப்படி அனுமதி தந்தது தவறு என்று சொல்கிறார்கள். ஆனால், எல்லாவற்றிலும் அதிமுகவுக்கு எதிராக பேசும் திமுக ஏன் இதுவரை விஜய் விஷயத்தில் வாய் திறக்காமல் உள்ளது என்று தெரியவில்லை..
சந்தேகம்
இதே பொள்ளாச்சி வழக்கில் அதிமுக பிரமுகர் கைது விஷயத்தில், கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கொதித்தெழுந்த திமுக தலைவர்கள் இந்த விவகாரத்துக்கு ஏன் மவுனம் காக்கிறார்கள் என்பது சந்தேகமாக உள்ளது.. திமுக என்றில்லை, காங்கிரசும் இதை கண்டிக்கவில்லை.. இந்த விஷயத்தில் முழுமையான எதிர்ப்பை பதிவு செய்தது, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஜவாஹிருல்லா போன்றோர் மட்டுமே.
தயவு
விஜய் விஷயம் அரசியலாக்கப்படுகிறதா? அல்லது விஜய்யின் தயவு திமுகவுக்கும் தேவைப்படுகிறதா? அல்லது திமுக ஆதரவாளராக எஸ்ஏ சந்திரசேகர் இருப்பதால், விஜய் மீது அமைதி காக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுக, திமுக ஊழல்களை லிஸ்ட் போட்டு சொல்லி வரும் கமல்கூட, விஜய் விஷயத்தை பற்றி பேசவே இல்லை.
கமல்
மக்களின் நலன் பற்றி இவர்கள் எல்லாம் பேசிவருவது உண்மையானால், விஜய்க்காக முதல்வர் எடுத்த ரிஸ்க் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும் இவர்கள் இந்நேரம் பேசியிருந்திருக்க வேண்டும்.. ஆனால் பேசவில்லை. ஒரு வேளை 100 சதவீத இருக்கை அனுமதியை கடுமையாக எதிர்த்தால் ஒட்டுமொத்த திரைத் துறையினரின் பகையை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்குமே என்ற அச்சம் மற்றும் தயக்கம் கூட கமல், திமுகவின் மெளனத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும்..!