ஓவியாவை ஏன் எல்லோரும் விரும்புகிறார்கள்? அந்த சைக்காலஜி என்ன தெரியுமா?
சென்னை: நடிகை ஓவியா தொடர்பான வீடியோ வெளியாகி ஊரே களேபரம் அடைந்து வரும்போது அவரால் எப்படி அதை எளிமையாக எடுத்துக் கொண்டு கடந்து போக முடிகிறது?
கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் நடிகை ஓவியாவின் வீடியோ லீக் ஆகி வைரலாக பரவி வந்த விசயமே பலருக்கும் தெரியாது. இன்ஸ்டாகிராமில் ஒருவர் அது தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மிக அருவருப்பான கேள்வி. அதைப் படிக்கும்போதே பலரும் எரிச்சல் அடைவார்கள். ஆனால், அதற்கு ஓவியா அளித்த ரிப்ளை தான் அவரது துணிச்சலைக் காட்டியது. மிகவும் கூலாக அவர், 'நெக்ஸ்ட் டைம் ப்ரோ' என்று கூறி இருந்தார்.

ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பார்கள். அப்படி ஊர் உலகமே அதகளப்படும் போது அதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் நிதானம் இழக்காமல் பதிலளிப்பது சாதாரண விசயம் இல்லை. அதன்பின்னர் நிலைமையே தலைகீழாக மாறியது. வீடியோ வைரலாவதற்கு பதிலாக அந்த நபருக்கு ஓவியா அளித்த பதிலை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டு பலரும் பரப்பி அவரை கொண்டாடினர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஓவியா மிகப்பெரிய நடிகை கிடையாது. அவருக்கு தமிழ் சினிமா பெரிய வாய்ப்புகளை ஒன்றும் கொடுத்துவிடவில்லை. பல நடிகைகளில் ஒருவராக அவர் இருந்தார். ஆனால், அவர் வாழ்க்கையில் ஒரு அமைதி புயலாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வந்தது. அதில் கூடுமானவரை அவர் வெளிப்படையாக இருந்தார். உண்மையாக நடந்து கொண்டார். அது பற்றிக் கேட்டால் ஓவியா, 'அது ஒரு கேம். அவ்வளவுதான்' என்கிறார்.
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பாதியிலேயே வெளியேறிய போது வெறித்தனமாக அவருக்கு 'ஓவியா ஆர்மி' என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்தார்கள். அவருக்கே அந்தளவுக்கு ஒரு அன்பை இந்த நிகழ்ச்சி மூலம் சம்பாதித்திருக்கிறோம் என்பது பிறகுதான் தெரியும். ஒருவர் வஞ்சகம் பண்ணாமல், சூதுவாது செய்யாமல் இயல்பாக இருப்பதை இந்த உலகம் ஏற்குமா? என்று பலமுறை கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கான யதார்த்தமான பதிலை தான் நிகழ்ச்சி மூலம் காட்டினார் ஓவியா. அவரது உண்மைத் தன்மையால்தான் ரசிகர்கள் குவிந்தனர்.

இப்போது கூட அவரது வீடியோ லீக் ஆகும்போது பதற்றமே இல்லாமல் பதில் தருகிறார். இதே மாதிரியான நெருக்கடிகளை அவர் தன் வாழ்க்கையில் ஏற்கெனவே சந்தித்து இருப்பதைப் பற்றி பேசி இருக்கிறார். அவர், "வாழ்க்கையில் மோசமான தருணங்களும் தேவை. அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் முக்கியம். அதில் பெற்ற பாடம்தான் வாழ்க்கையை புரிய வைக்கும். எனவே மோசமான தருணங்கள் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நான் நன்றிதான் செலுத்துவேன். அதை ஏன் கொடுத்த என்று வருந்த மாட்டேன்.
அதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். அது முதலில் புரியாது. போகப் போகப் புரியும்" என்று சொல்லி இருக்கிறார். இந்த உலகம் அப்படித்தான் இருக்கும். அதற்காக நாம் மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளக் கூடாது என்பதே ஓவியா பாலிசி. ஆகவேதான் "அட்வைஸ் கொடுப்பதும் இல்லை. எடுத்துக்கொள்வதும் இல்லை" என்கிறார்.
அவர் தன்னை எப்போதும் ஒரு நடிகையாக நினைத்துச் செயல்படுவதில்லை. "செலப்ரிட்டி என்ற ஃபீல் எனக்குச் சுத்தமாக இல்லை. மற்றவர்களுக்கும் இருக்கக்கூடாது என நினைக்கிறேன்" என்றும் அவர் முன்பே சொல்லி இருக்கிறார். ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக திடீரென்று அவரைப் பற்றி வதந்தி பரவியது. அப்போதும் கூட அவர் ஆவேசமாக எதையும் பேசவில்லை. "டிஆர்பிக்காக சொல்கிறார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். ஒரு நடிகையாக இருந்தால் இப்படி எல்லாம் வரவே செய்யும். அதை நாம் மன வருத்தம் அளிக்கும் அளவுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது" என்றும் பேசி இருந்தார்.
பலர் சமூக வலைத்தள பக்கத்தில் இருப்பார்கள். ஆக்டிவ் ஆக செயல்படுவார்கள். ஆனால், மறுமொழி இடமாட்டார்கள். பார்த்துவிட்டுக் கடந்துவிடுவார்கள். ஆனால், ஓவியா அனைத்து கமெண்ட்டுகளையும் படிப்பேன் என்றும் அதில் வரும் பாசிடிவ் கருத்துகள் மனதிற்குப் பிடிக்கும் என்றும் முன்பு கூறியிருந்தார். "வழக்கமாக எனது சமூக வலைத்தளங்களில் வரும் கமெண்ட்டுகளை நான் அடிப்பேன்" என்று சொன்ன அவர் உலகில் நான் அதிகம் நம்பும் ஒரே நபர் தான் மட்டும்தான் என்று விளக்கம் அளித்திருந்தார்.
வெளிப்படையாக அவர் வீடியோவை கேட்டு கருத்திட்டவருக்கு ஓவியா அளித்த பதிலை நினைக்கையில் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது. அவர், ""வாழ்க்கையில் உண்மையாக இருப்பது எனக்குப் பிடிக்கும். ஏன் பொய்யாக நடிக்க வேண்டும். மனதில் பட்டதை கேட்டவரை நான் அதிகம் விரும்புவேன்" என்று பேசி இருந்தார். அவர் பலரைப்போல மூடி மறைத்துப் பேசாமல் வெளிப்படையாகக் கேட்டதை ஓவியா விரும்பியே பதிலளித்துள்ளார் என இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒருவேளை அவர் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பாரா என வீடியோவை வைத்து பலர் நினைக்கக்கூடும். அதற்கும் ஓவியா முன்பே அளித்த பதில்தான் நினைவுக்கு உடனே வருகிறது. அவர் ஒரு பேட்டியில், "அது ஒரு பர்சனல் விசயம். அதற்குப் பொதுவான கருத்தைச் சொல்ல முடியாது. கிராமத்தில் போய் நான் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருக்கிறேன் என்றால் பெரிய சிக்கலாக மாறிவிடும். அங்கே என்னவோ அதற்கு ஏற்ப வாழ்ந்தால்தான் மன அமைதி கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.
முன்பே சொன்னதைப் போல எப்படி நீரோ மன்னன் போல் இவர் மன அமைதியாக இந்தச் சர்ச்சைகளைக் கடந்து போகிறார்? ஏனெனில் இந்த உலகத்தில் அவர் அதிகம் விரும்பும் ஒரே நபர் யார் தெரியுமா? ஹெலன். அது யார்? வேறு யாரும் இல்லை அவரேதான். அவரது உண்மையான பெயர் அது. தமிழ்நாட்டுக்குத்தான் அவர் ஓவியா.












Click it and Unblock the Notifications