சர்ருனு ஏறுதே தங்கம் விலை.. உண்மையில் என்ன காரணம்! எப்போது குறையும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் விளக்கம்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், எப்போது குறையும் என்ற கேள்விக்கும் பதில் கொடுத்துள்ளார்.
தங்கம் விலை கடந்த பல காலமாகவே பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமலேயே இருந்தது. ரூ 5500க்கு கீழ் இருந்த ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 5350 என்ற ரேஞ்சிற்கும் கூட சென்றது. ஆனால், இந்த நிலை நீண்ட நாள் நீட்டிக்கவில்லை.

கடந்த 10 நாட்களுக்கு மேலாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. அதேபோல நேற்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது.
ஆனந்த் சீனிவாசன்: இந்தாண்டு முழுக்க தங்கம் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பது அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.. இதற்கிடையே தங்கம் விலை ஏன் உண்மையில் அதிகரித்துள்ளது.. வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை எப்போது குறையும் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோவில் கூறுகையில், "தங்கம் விலை இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5500க்கு மேல் மீண்டும் சென்றுவிட்டது. இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம் காரணமாகவே தங்கம் விலை அதிகரித்துள்ளது. வரி மீண்டும் அதிகரித்தால் நிச்சயம் தங்கம் விலை குறையத் தொடங்கும். இப்போது தங்கம் விலை ஏற சரியான காரணங்களே இல்லை. இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையால் மட்டுமே தற்காலிகமாகத் தங்கம் விலை அதிகரிக்கிறது.
தங்கம் விலை எப்படி இருக்கும்: எனவே, காத்திருங்கள்... மெல்ல மெல்லத் தங்கத்தை வாங்கலாம்.. அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கம் வாங்கச் சரியான நேரமாக இருக்கும். மீண்டும் இதுபோல ஒரு வாய்ப்பு அமைவது கஷ்டம்.. இது தங்கத்தை வாங்கச் சரியான நேரம். இந்த காலகட்டத்தில் தங்கம் விலை ரூ. 5300 முதல் ரூ. 5600க்குள் தான் தங்கம் இருக்கும்.
என்ன காரணம்: தற்போது திடீரென கொஞ்சம் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் மட்டுமே காரணம். அங்கே பிரச்சினை சரியானால் போதும்.. தங்கம் விலை மீண்டும் குறைந்துவிடும். தங்கம் விலை பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த இஸ்ரேல் விவகாரத்தில் விலை சற்று அதிகரித்துள்ளது. அவ்வளவுதான். எங்கு இதன் பிறகு ஒரேயடியாக ஏறிவிடுமோ என அச்சம் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக அரை கிராம் ஒரு கிராம் என்று தங்கத்தை வாங்கலாம்" என்றார்.
பொதுவாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் பங்குச்சந்தை, தங்கம் என அனைத்தும் அமெரிக்க வட்டி விகிதத்தைப் பொறுத்தே இருக்கும். இந்த மாதம் இறுதியில் மற்றும் டிசம்பர் மாதம் என இந்தாண்டில் மட்டும் இரண்டு முறை அமெரிக்க மத்திய வங்கி மீட்டிங் நடக்க உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், இந்த 2 மீட்டிங்கில் குறைந்தது ஒரு முறையாவது வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. அப்படி உயர்த்தப்படும் போது, தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
வட்டி விகிதம்: அமெரிக்காவில் இப்போது வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாகவே வட்டி விகிதம் அங்கே ஜீரோவில் இருந்து 5.5% ஆக உயர்த்தியுள்ளனர். இன்னும் ஒன்று அல்லது இரண்டு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. அப்போதும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு பணவீக்கம் கட்டுக்குள் வரும் வரை தங்கத்தின் விலையை அதிகரிக்காது.
அதேநேரம் பணவீக்கம் கட்டுக்குள் வந்த உடன் தங்கத்தின் விலையை உயர்த்த தொடங்குவார்கள். அப்போது தங்கம் விலை கிடுகிடுவென அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதைக் கணக்கிட்டே அடுத்த 18 மாதங்கள் வரை தங்கம் வாங்கச் சிறந்த காலமாக இருக்கும் என்று ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications