'காவிரி' நீர் திடீர் திறப்பு- கர்நாடகா எலி ஏன் 'நிர்வாணமாக' ஓடுது தெரியுமா?அணைகள் நீர் இருப்பு என்ன?
சென்னை: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திடீரென கர்நாடகா அரசு திறந்துவிட்டிருப்பது அப்பட்டமான, துரோகத்தனமான நாடகம் என்பதை 'காவிரி ஒழுங்காற்று குழு' கூட்டம் நாளை கூடும் என்ற அறிவிப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது.
காவிரியின் குறுக்கே வம்படியாக கர்நாடகா கட்டிய கிருஷ்ணராஜ ராஜகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 101.22; தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடும் மற்றொரு அணையான கபினியின் நீர் மட்டம் 57.51.

கர்நாடகாவின் காவிரி அணைகளில் இவ்வளவு நீர் இருந்தும் கர்நாடகா பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தூண்டுதலால் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் இடைவிடாத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு ரத்தம் தருவோம்; சொட்டு நீரைத் தர முடியாது என இனவெறி கூச்சல்களை எழுப்பி போராடுகின்றனர். இன்றைக்கும் கர்நாடகாவில் போராட்டம் தொடருகிறது. எந்த ஒரு அணையாக இருந்தாலும் சொற்ப நீர் திறந்துவிடப்படும். அப்படியான காவிரி நீர் கூட தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது என்கிற வெறுப்பின் உச்சத்தை கன்னட இன அமைப்புகள் காட்டுகின்றன.
நீர் திறக்க மறுக்கும் காங்கிரஸ்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு நியாயப்படி நடக்காமல், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படியான காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், உச்சநீதிமன்ற ஆணையை பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறக்க முடியாது என்கிறது. தமிழ்நாட்டு மக்களின் முதுகில் பச்சைத் துரோகத்தை குத்திக் கொண்டிருக்கிறது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு.
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு: இந்த நிலையில்தான் கர்நாடகா அணைகளில் இருந்து திடீரென மொத்தம் 7,973 கன அடிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டது. இத்தனைக்கும் கர்நாடகா அணைகளில் நேற்று நீர்வரத்து குறைவாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது கேஆர்எஸ் என்கிற கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,973 கன அடிநீரும் கபினி இருந்து 2,000 கன அடி நீரும் திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. தமிழ்நாடு சட்டசபையில் காவிரி பிரச்சனைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை கர்நாடகா அரசு மேற்கொண்டது ஆச்சரியத்தை தந்தது.
காவிரி ஒழுங்காற்று கூட்டம்: தற்போது, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துதான் விடுகிறோம் என்கிற கபட நாடகத்தை அரங்கேற்றவே கர்நாடகா இன்று திடீரென 7,973 கன அடிநீரை திறந்துவிட்டிருக்கிறது என்கிறனர் அரசியல் வல்லுநர்கள். தமிழ்நாட்டு காவிரி டெல்டா மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து 'செத்து செத்து' விளையாட்டு காண்பிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் துரோகத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்பதுதான் டெல்டா விவசாயிகளின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications