இன்று வாசன், நாளை கமல்ஹாசன்.. கருணாசின் அடுத்தடுத்த அதிரடிகளின் பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை இன்று, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சந்தித்தார்.
இது மட்டுமல்ல, நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்திக்க உள்ள கருணாஸ், இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
ஜி.கே.வாசனை சந்தித்த பிறகு கருணாஸ் அளித்த பேட்டியில், ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க அரசு பொதுப்பணித்துறை பணிகள், அமைச்சர் மணிகண்டன் மேற்பார்வையில் நடப்பதாகவும், எம்எல்ஏக்களை கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார்.
[ஆபாசத்துக்கு மாறி வரும் பாசக்கார அரசியல்வாதிகள்!]
கருணாஸ் பேட்டி
அமைச்சர் மணிகண்டன் தன்னை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றார் கருணாஸ். ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மாத இறுதியில், வர உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. மாவட்ட காவல்துறை குண்டாஸ் போன்ற சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க அறிகுறி தென்படுகிறது. தொப்பளாங்கரை என்ற ஊரில், கலவரம் ஏற்பட்டு, எனது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது என்றார்.
கமல்ஹாசன், சீமான்
கருணாஸ் வரிசையாக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். கடந்த 11ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் சந்தித்தார். முன்னதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ, ரத்தின சபாபதி கருணாசை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். நாளை கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறும், கருணாஸ், அதையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க உள்ளாக தெரிவித்தார்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் தலைவர்கள், முத்தரசன், பாலகிருஷ்ணன், மற்றும் சில தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கருணாஸ் தெரிவித்தார்.
கருணாஸ் மீது நடவடிக்கை
இந்த சந்திப்புகளின் பின்னணி குறித்து கருணாசுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக சமீபகாலமாக கருணாஸ் பேட்டியளிக்கிறார், பேசி வருகிறார். இந்த நிலையில், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை போன்ற நடவடிக்கை கருணாஸ் மீதும் பாயும் என்பதை போன்ற சமிக்ஞைகள் அரசு தரப்பில் வெளியாகின. இதன்பிறகுதான் கருணாஸ் சுதாரித்துக்கொண்டார்.
ஜாதி ஆதரவை திரட்ட பேச்சு
தான் சார்ந்த முக்குலத்தோர் ஜாதியினரின் ஆதரவை பெறுவதற்காக, ஜாதியை முன்னிறுத்தி பேசியும், பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார். ஜாதி ரீதியாக ஆதரவை திரட்ட முயன்றாலும், எதிர் முகாமிலுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதே ஜாதியை சேர்ந்தவர் என்பதால், கருணாசுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, ரூட்டை வேறு வகையில் மாற்றியுள்ளார்.
அரசியல் எதிர்காலம்
எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து தனக்கான குரல்களை வலுப்படுத்த துவங்கியுள்ளார். கருணாசுக்கு எதிராக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதுபற்றி கேட்பாரற்று போய்விட கூடாது என நினைக்கும் கருணாஸ், அரசியலில் தனக்கான ஆதரவு வளையத்தை அதிகரித்து வருகிறார். இதன் மூலம், அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட தேவையான காய் நகர்த்தலும் இதில் அடங்கியுள்ளது. கருணாசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த தயங்குவார்கள், அல்லது இவரை தங்கள் கூட்டணியில் இணைப்பார்கள், இதன் மூலம், அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளையும், கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் அறுவடை செய்து, மீண்டும் எம்எல்ஏவாகலாம் என்பது அவரது திட்டமாம்.