இருக்கு.. ஆனா இல்ல.. எல்லாத்துக்கும் காரணம் ஒரே ஒருத்தர்தான்.. பஞ்சாப் டீம் ஏன் இப்படி இருக்கு?
சென்னை: "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற சொலவடை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பக்காவாக பொருந்துகிறது.
அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் இரண்டு இடம், அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடம், இப்படி ஆயிரம் இருந்தும் புள்ளி பட்டியலில் அடியில் கிடைக்கிறது பஞ்சாப் அணி.
தனது முதல் ஆட்டத்தில் கைக்கு கிடைத்த வெற்றியை, சூப்பர் ஓவரில் நழுவ விட்ட போதே, பஞ்சாப் அணியின் வியூகம் பலவீனமானது என்பது புரிந்துவிட்டது.
இந்தியா கேட்டில் எதிர்கட்சிகள் போராட திட்டம்.. தடை போட்ட டெல்லி போலீஸ்
சூப்பர் ஓவர் சொதப்பல்
சூப்பர் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுக்கும் ஒரு அணி எப்படி வெற்றிக்கான கோப்பைக்கு ஆசை பட முடியும்? என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். நன்கு ஆடிக் கொண்டிருந்த மாயங் அகர்வாலை சூப்பர் ஓவருக்கு அனுப்பாமல், பூரன் அனுப்பி வைக்கப்பட்டார். டெல்லியின் ரபடா ஒரே ஓவரில் 2 விக்கெட் டுகளை எடுக்க வெறும் இரண்டு ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப். டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை பஞ்சாப் அணி மீளவே இல்லை.
நல்ல டீம்தான்.. ஆனால்
நேற்று மும்பையுடன் நடந்த போட்டியுடன் சேர்த்து இதுவரை பஞ்சாப் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இத்தனைக்கும் பஞ்சாப் அணி பேப்பரில் எழுதி பார்ப்பதற்கு மட்டும் இல்லை.. களத்திலும் அருமையான அணிதான். கேப்டன் செய்யும் தவறுகள் அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவேதான் பேட்டிங் பவுலிங் என கில்லியா இருந்தாலும், வெற்றியை மட்டும் பறிக்க முடியவில்லை.
மோசமான முடிவுகள்
மாயங் அகர்வால் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படாத முடிவு எப்படி தவறானதோ, அதேபோலத்தான் நேற்று பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் களத்தில் நிற்கும் போது 20 வரை ஒரு ஸ்பின் பவுலரை விட்டு வீசச் செய்தது. அதிகப்படியான ரன்கள் அந்த ஓவரில் தான் வந்தது. கடைசி ஓவரில், இத்தனை ரன்கள் அடித்ததுமே பஞ்சாப் அணியின் மனபலம் பாதியாக குறைந்து இருக்கும். பேட்டிங்கிலும் அது எதிரொலித்தது. மிக மோசமான தோல்வி நேற்று பஞ்சாபுக்கு கிடைத்தது.
டாப் வீரர்கள்
நடப்பு ஐபிஎல் சீசனில், அணி கேப்டன் ராகுல் 239 ரன்களுடன் 2-வது இடத்திலும் மயங்க் அகர்வால் 246 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். இருவரும் ஆளுக்கு ஒரு சதம் அடித்துள்ளார். அந்த அணியின் முகமது ஷமி 8 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். டெல்லி அணியின் ரபடா 7 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
டீம் முயற்சி
தனிப்பட்ட வீரர்களை எடுத்துப்பார்த்தால் திறமையில் பஞ்சாப் பலமான அணி. ஆனால் ஒரு குழுவாக இணைந்து ஆடுவதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் இஷ்டத்துக்கு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இணைந்து செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிப்போம் என்ற முயற்சியே கிடையாது.
தோனி சாதுர்யம்
இந்த இடத்தில்தான் தோனி வித்தியாசமானவர். அணி என்னதான் பலவீனமாக இருந்தாலும், தனது கேப்டன்சி மற்றும் வியூகங்கள் மூலமாக எதிரியிடமிருந்து வெற்றியை பறித்து விடுவார். ஆனால், பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல், நல்ல பேட்ஸ்மேனாக இருந்தபோதிலும், கேப்டன்சி விஷயத்தில் ரொம்பவே மோசமாக முடிவுகளை எடுத்து வருகிறார்.
மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு
மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பும் போதும் கிறிஸ் கெயில் பெவிலியனில்தான் உட்கார்ந்து இருக்கிறார். மேக்ஸ்வெல்லுக்கு மறுபடி மறுபடி வாய்ப்பு வழங்குகிறார் கேப்டன் ராகுல். பவுலர்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்தாலும் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தும் அளவுக்கான பந்துவீச்சாளர்கள் இல்லை. இதையெல்லாம் கண்டறிந்து ஏற்கனவே அணியை மாற்றியமைத்திருக்க வேண்டும். அதை இன்னும் செய்யவில்லை. பஞ்சாப் ரசிகர்களுக்காக இல்லாவிட்டாலும்.., வெற்றிக்கான ஏக்கத்தோடு காத்திருக்கும் ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவாவது, கேப்டன் ராகுல் இதைச் செய்ய வேண்டும். கன்னத்தில் குழி விழுந்து அவர் சிரிக்கும் அழகை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை ராகுல் ஏமாற்றக் கூடாது.