‘கருணாநிதி காங்கிரஸ்’.. 2015ல் கோவை செல்வராஜ் கட்சி மாறியது இதற்குத்தான்.. இன்று அப்படியே ‘பல்டி’!
சென்னை : அன்று, கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்துப் பேசி காங்கிரஸில் இருந்து வெளியேறிய கோவை செல்வராஜ், இன்று திமுகவிற்கே செல்ல இருக்கிறார். அரசியலும் வட்டம் தான் என்பதை இதன்மூலம் நிரூபித்திருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, காங்கிரஸ் சேவாதள தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ், அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு குடைச்சல் கொடுத்து வந்தார்.
கூட்டணிக் கட்சியான திமுகவை விமர்சித்துப் பேசியதோடு, அதிமுகவுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிக்குத் தயாராக வேண்டும் எனப் பேசினார்.
இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கே செல்ல ரெடியாகி வருகிறார் கோவை செல்வராஜ்.
'அங்கே’ ஆரம்பிச்சது! பிளான் டிராப்.. முக்கிய புள்ளி சிக்னல்! கோவை செல்வராஜ் முடிவுக்கு பின்னணி என்ன?
ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில்
அதிமுகவில் தலைமை மோதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், கோவை செல்வராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலரே இருக்கின்றனர். அதில் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
அதிமுகவில் இருந்து விலகல்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகப்போவதாக கோவை செல்வராஜ் கடந்த சனிக்கிழமையன்று அதிரடியாக அறிவித்தார். இதனால் அவர் ஈபிஎஸ் அணிக்கு செல்லப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்தே விலகுகிறேன், ஆனால், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன். ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன் எனத் தெரிவித்தார்.
நாளை இணைகிறார்
இந்நிலையில் தற்போது அவர் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக அமைச்சர் ஒருவரிடம் பேசி, திமுக தலைமையின் ஒப்புதலை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கோவை செல்வராஜ் திமுகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திமுகவில் இணைவதில் தப்பில்லை
திமுகவில் இணைவதை உறுதி செய்யும் வகையிலேயே கோவை செல்வராஜ் பேசி வருகிறார். திமுக வெறுக்கக் கூடிய கட்சி இல்ல. ஸ்டாலின் நன்றாகவே செயல்படுகிறார். எம்ஜிஆர் முதலில் காங்கிரஸில் இருந்து பிடிக்காமல் திமுகவுக்கு வந்தார் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாவின் 100வது பிறந்த நாளுக்கு இதுவரை ஒபிஎஸ், ஈபிஎஸ் விழா நடத்தவில்லை. ஆனால் ஸ்டாலின், ஜானகி அம்மாவுக்கு விழா எடுத்தார் திமுகதான் இன்றைக்கு திராவிட பராம்பரியம் கொண்ட கட்சியாக இருக்கிறது. அதனால் திமுகவில் இணைவதில் தவறு இல்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கோவை செல்வராஜ்.
திமுகவை விமர்சித்ததால் வெளியேற்றப்பட்டவர்
தற்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்குச் செல்லத் தயாராகி வரும் கோவை செல்வராஜ் அன்று, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கூட்டணிக் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததற்காகவே வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே ஜெயலலிதாவை பாராட்டிப் பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான கோவை செல்வராஜ், காங்கிரஸ் சேவாதள அமைப்பின் மாநில அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொறுப்பேற்றது முதல் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
கருணாநிதி காங்கிரஸ்
மேலும், தமிழகத்தில் இளங்கோவன் தலைமையில் இருப்பது 'கருணாநிதி காங்கிரஸ்' என்றும் விமர்சனம் செய்தார். அதற்கு இளங்கோவன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், செல்வராஜ் பேச்சை ஆதாரத்துடன் டெல்லி தலைமைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும், கூட்டணியில் இருந்த திமுகவை விமர்சித்ததோடு, வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்றும் பேசி காங்கிரஸில் பரபரப்பைக் கிளப்பினார் கோவை செல்வராஜ்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல்
2015ஆம் ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வெளிப்படையாகவே பேசினார் கோவை செல்வராஜ். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது, அதிமுகவுடன் இணைந்து வலுவான கூட்டணியை அமைக்க, நாம் இப்போதே அதிமுகவுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும், அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனப் பேசினார். இதனால் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கோவை செல்வராஜ்.
அதன்பிறகு அதிமுக
அதன்பிறகு ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அதிமுகவில் தொடர்ந்து வந்த கோவை செல்வராஜ், அண்மையில் ஏற்பட்ட ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதலுக்குப் பிறகு தீவிரமாக ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த கோவை செல்வராஜ், தனது அரசியல் எதிர்காலம் கருதி திமுகவில் இணைய இருக்கிறார்.