தேசிய அளவில் பெரிய டீம்? முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்திக்கும் தலைகள்.. பின்னணியில் அவரா?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பல்வேறு மாநில முதல்வர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்கள். இந்த சந்திப்புகளுக்கு பின் தேசிய அளவில் பெரிய திட்டம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாஜக-காங்கிரஸ் அல்லாத ஒரு வலிமையான அணியை அகில இந்திய அளவில் கட்டமைக்க வேண்டும் ; எதிர்காலத்தில் பிரதமராக வேண்டும் என்பதே மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் திட்டம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்காக மம்தா தீவிரமாக களத்தில் செயல்பட்டு வருகிறார். பல மாநில தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இதற்கான ஒரு வியூக திட்டம் ஒன்றை மம்தாவிடம் பிரசாந்த் கிஷோர் தாக்கல் செய்திருக்கிறாராம். அந்த அசைண்மெண்டிற்கான முயற்சியை பி.கே.விடமே ஒப்படைத்துள்ளார் மம்தா. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் வலிமையாக உள்ள அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் திட்டம் அது.

வியூகம்
மம்தாவின் திருணாமுல் காங்கிரசுக்கும், ஸ்டாலினின் திமுகவுக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பி.கே. கடந்த வாரம், தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ், சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னணியில் இருந்ததே பி.கேதான் என்று சொல்லப்படுகிறது.

பினராயி விஜயன்
அதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (19/12/2021) இரவு சென்னை வருகிறார். தனிப்பட்ட பயணமாக சென்னை வரும் அவர் ஸ்டாலினை சந்திக்க கூடும் என திமுக மேலிடத்திலிருந்து தகவல் வருகிறது. ஆனால் சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை சந்திப்பு உறுதியானால், தமிழகம்-கேரளம் சார்ந்த சில பிரச்சனைகள் விவாதிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டாலும் வேறு சில விஷயங்களும் பேசப்படும் என்கிறார்கள்.

வேறு சில விஷயங்கள்
அரசியல் ரீதியிலான பேச்சுக்களே அந்த சந்திப்பின் பிரதான அம்சமாக இருக்கும் என்கிறார்கள் பி.கே. வுடன் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள். இது மட்டுமல்ல, ஆன்மீக பயணமாக ஜனவரியில் தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ள மம்தா, அப்போது ஸ்டாலினை சந்திக்கவிருக்கிறார். ஸ்டாலின் - மம்தா சந்திப்பின் போது அகில இந்திய அளவிலான அரசியலுக்கு ஒரு இறுதி தீர்வு எட்டப்படும் என்றே தேர்தல் வியூக நிபுணர்கள் நம்மிடம் பகிர்கிறார்கள்.

தீர்வு
இந்த அனைத்திற்கு பின் இருக்கும் அந்த நபர் பிகேதான் என்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே அரசியல் விமர்சகர்களிடம் இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கலைஞர் மீது இருந்த நம்பிக்கையும் பாசப்பிணைப்பும் ஸ்டாலினிடமும் இருக்கிறது. மம்தாவின் முயற்சியில் இது உடைப்படுமா ? என்பதுதான் விடை காண முடியாத விசயமாக இருக்கிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications