சென்னை முதல் மதுரை முத்து தேவன் பட்டி, நெல்லை மீனாட்சிபுரம் மதராஸா வரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சென்னை: நாட்டின் 10 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) வின் அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மதுரை முத்து தேவன் பட்டி மதராஸா, நெல்லை மீனாட்சிபுரம் மதராஸாக்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) அலுவலகங்களில் ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இரு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு புதன்கிழமை இரவும் இன்றும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI)-வின் நிர்வாகிகள், அதனுடன் தொடர்புடைய அறக்கட்டளைகள், மதப்பள்ளிகளான மதராசாக்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ விசாரணை.. இளையான்குடியில் பரபரப்பு.. பின்னணி!
10 மாநிலங்களில் சோதனை
10 மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனைகளை ஒருங்கிணைக்க 6 கண்ட்ரோல் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்ட்ரோல் ரூம்கள் மூலம் சோதனைகள் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. அத்துடன் சோதனைகள் நடைபெறும் இடங்களில் மோதல்களைத் தடுக்கும் வகையில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கேரளா
கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) தலைவர் சலாம், கேரளா மாநிஅல் தலைவர் முகமது பசீர், தேசிய செயலாளர் நசரூதீன் உள்ளிட்டோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) தலைவர்கள், நிர்வாகிகள் பலரது வீடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள்
டெல்லி, ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், கேரளா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உ.பி, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) கடந்த சில மாதங்களாக படுதீவிரமாக செயல்பட்டு வருகிறதாம். மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு- சி.ஏ.ஏ. போராட்டங்களில் பங்கேற்ற பலரும் இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளனராம். இதனையடுத்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.
வளைகுடா நிதி
மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவு பணத்தை நன்கு கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க் மூலம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) நிதியாகப் பெற்று வருவதையும் இந்த பணம் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்ததாம். இதனடிப்படையில்தான் தற்போது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பீகாரின் பாட்னாவில் பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கராத்தே பயிற்சி மையம்
தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் கராத்தஏ பயிற்சி நிலையம் ஒன்றிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாக புகார் உள்ளது. கர்நாடகா பாஜக தலைவர் பர்வீன் படுகொலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI)-க்கு தொடர்பிருக்கிறது என்பது போலீசார் சந்தேகம். இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம்.
தமிழகம்
தமிழகத்தில் முத்து தேவன்பட்டி மதராஸா, நெல்லை மீனாட்சிபுரம் மதராஸா, திண்டுக்கல் பேகம்பூர் என மூலை முடுக்களில் எல்லாம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காட்சி ஆகிய இடங்களிலும் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகளுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தது. பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.