முக்கிய காரணங்களும்.. அதிரடி திட்டங்களும்.. ராகுல் காந்தி வயநாட்டை தேர்வு செய்தது ஏன் தெரியுமா?
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாட்டில் போட்டியிடுவதற்கு பின் பல முக்கிய காரணங்களும், அதிரடி திட்டங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிரடி திருப்பமாக கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அங்கு அவர் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இதனால் தேசிய அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
குமரிக்கு நோ.. கேரளாவிற்கு டிக் அடித்த ராகுல்.. காங்கிரஸ் முடிவால் தமிழ்நாட்டிற்கு பின்னடைவா?
தெற்கில் எப்படி
ராகுல் காந்தியின் முதல் திட்டம், தென்னிந்தியாவில் வலுவாக இருக்கும் காங்கிரஸ், நிறைய இடங்களை வெற்றிபெற வேண்டும் என்பதுதான். அதாவது வலுவாக இருந்தாலும் கர்நாடக போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் குறைவான இடங்களை பெறவே வாய்ப்புள்ளது. இதனால் தென்னிந்தியாவில் தானே நிற்கும் பட்சத்தில் ராகுல் காந்தியால் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தையும் கவனிக்க முடியும்.
தலைவராக காட்ட திட்டம்
அதை போலவே தன்னை ஒரு பறந்து விரிந்த நாட்டின் தலைவராக காட்டிக்கொள்வதில் ராகுல் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே மாநில உரிமைகள் குறித்து பேச தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி, தற்போது தென் மாநிலங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் நாடு முழுமைக்குமான தலைவராக தன்னை முன்னிறுத்த முயல்கிறார்.
வெள்ளத்தில் பாதித்தது
இதில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தேர்வு செய்ததில் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. தற்போது இந்தியாவில் பாஜக எதிர்ப்பு அதிகம் இருக்கும் தொகுதி எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு வயநாட்டில் கை வைக்கலாம். 2018 வெள்ளத்தில் வயநாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் மத்திய பாஜக அரசு போதிய உதவி செய்யவில்லை என்று இப்போதும் அங்கு மக்களுக்கு கோபம் இருக்கிறது.
காங்கிரஸ் கோட்டை
அதேபோல் வயநாடு தொகுதி, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். அங்கு, காங்கிரஸ் எம்பி எம்ஐ ஷாநவாஸ் வரிசையாக லோக்சபா தேர்தலில் இரண்டு முறை வெற்றிபெற்றார். தற்போது அவரின் மறைவு காரணமாக அங்கு தொகுதி காலியாக இருக்கிறது. இங்கு பாஜக பெரும்பாலும் மூன்று அல்லது நான்காம் இடத்துக்கே வரும் என்றும் கூறுகிறார்கள்.
மதம்
அதேபோல் இதில் மதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு 49% இந்து வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் 49% இஸ்லாமிய, கிருஸ்துவ வாக்காளர்கள் இருக்கிறார்கள். 49% இந்து வாக்காளர்களில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பாரம்பரிய காங்கிரஸ் கட்சி வாக்காளர்கள். அதனால் எளிதாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இங்கு வாக்குகளை பெற முடியும் என்று ராகுல் காந்தி நம்புகிறார்.
அனைத்து இடங்கள்
தென்னிந்தியாவில் ராகுலுக்கு பரிசீலிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட எந்த தொகுதியும் இந்த அளவிற்கு அவருக்கு சாதகமான தொகுதி கிடையாது. வயநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கொஞ்சம் வலுவான கட்சி என்பதால் அது மட்டுமே அவருக்கு கொஞ்சம் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் உதவும்
அதேபோல் இந்த போட்டி, கேரளா சட்டமன்ற தேர்தலில் உதவும் என்றும் ராகுல் நம்புகிறார். மீண்டும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று அவர் நம்புகிறார். அமேதி கொடுத்த வார்னிங் சிக்னலும் இந்த முக்கிய முடிவிற்கு ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.