ஸ்டாலினுக்கு வந்த ஃபோன் கால்.. அடுத்தடுத்து 5 பேருக்கும்.. திங்கட்கிழமை என்ன செய்வது? கேசிஆர் பேச்சு
சென்னை : தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் சந்திரசேகர் ராவ்.
இந்த உரையாடலில் ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்த சந்திரசேகர் ராவ், நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுப்பது பற்றி ஸ்டாலினின் உதவியாளரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று லேசான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் போன் கால்
இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஹைதராபாத்தில் இருந்து போன் கால் வந்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஸ்டாலினின் உடல்நிலை குறித்து விசாரித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலின், விரைவில் உடல்நலம் பெற்று வரவேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் ராவ் ஸ்டாலினுக்கு போன் செய்தது வேறொரு விஷயமாக. ஆனால் ஸ்டாலின் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது உதவியாளரிடம் அதுகுறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய முடிவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை (ஜூலை 18ஆம் தேதி) தொடங்கவிருக்கும் நிலையில், மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமித்த குரலை ஒலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு அது தொடர்பாக ஆலோசிப்பதற்காகவே ஸ்டாலினை தொடர்பு கொண்டார் சந்திரசேகர். இந்த விஷயம் ஸ்டாலினின் உதவியாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு இதுகுறித்து மீண்டும் சந்திரசேகர் ராவிடம் பேசுவார் என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மட்டுமல்லாமல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் உடனும் பேசியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.

நாடாளுமன்றத்தில்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் பேசி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பாஜக அரசுக்கு எதிராக ஒருமித்த குரல் ஒலிப்பது பற்றி ஆலோசித்துள்ளார் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வருமான சந்திரசேகர் ராவ்.

தொடர்ந்து தவிர்ப்பு
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடுமையாகச் செயல்பட்டு வருகிறார் சந்திரசேகர் ராவ். சந்திரசேகர் ராவ் தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். கடந்த 6 மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தெலுங்கானா சென்றுள்ளார். இந்த 3 முறையும் பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகர் ராவ் மரியாதை நிமித்தமாகக் கூட வரவேற்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசுக்கு எதிராக
மோடி அரசை மிகவும் காட்டமாக விமர்சிப்பவர்களில் முன்னணியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், மோடி அரசை வீழ்த்தி மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக இந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications