ஜெயக்குமாரை கைது செய்த ஐபிஎஸ் டிரான்ஸ்பர்.. திடீர் ஆக்சன்.. என்னாச்சு?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி சுந்தரவதனம் திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்திற்கு புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர், திருவண்ணாமலை,திண்டுக்கல், ராமநாதபுரம், கரூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் எஸ்.பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம் யார் யார்?
கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட எஸ்.பியாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் 4 டிசிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, ஒரே மாதத்தில் 20 கொலைகள் நடந்துவிட்டது என்று புகார்கள் வந்த நிலையில் இந்த அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன.

ஜெயக்குமார் கைது
இந்த நிலையில்தான் ஜெயக்குமாரை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இங்கு திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி இருந்தார். அதோடு சஞ்சீவிராயன் கோவில் தெருவில் முன்னாள் ஜெயக்குமார் நேராக சென்று சோதனைகளை செய்தார்.

என்ன நடந்தது?
அங்கு காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகி ஒருவரை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்கள் தாக்கினர் திமுக நிர்வாகி என்று கருதப்படும் அந்த நபரை ஜெயக்குமார் ஆட்கள் மேலாடை இன்றி அடித்து, அழைத்து வந்தனர். இதையடுத்து ஜெயக்குமாரை இரவோடு இரவாக வண்ணாரப்பேட்டை காவல் துறை துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் பூபாலன், சங்கர பாண்டியன் ஆகியோர் கைது செய்தனர்.

டெல்லி கடிதம்
இரவோடு இரவாக, ஜெயக்குமாரை கைலி கூட மாற்ற விடாமல் அப்போது சுந்தரவதனம் கைது செய்து அழைத்து வந்தார். தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்த நிலையில் தன்னை கைது செய்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், மனித உரிமை மீறப்பட்டதாகவும் ஜெயக்குமார் டெல்லிக்கு கடிதம் எழுதினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஜெயக்குமார் கடிதம் எழுதினார்.

கரூர் மாற்றம்
இதில் மனித உரிமை மீறப்பட்டதாகவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால் அப்போது அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது வண்ணாரப்பேட்டை டிசியாக இருந்த சுந்தரவதனம் கரூர் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவரின் மாற்றத்திற்கு பின் ஜெயக்குமார் கைது காரணம் இல்லை என்றே போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயல்பாக நடக்கும் டிரான்ஸ்பர் நடவடிக்கையின் அடிப்படையில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications