திமுகவின் கடும் எதிர்ப்பாளர்.. மோடியின் தீவிர பக்தர்.. எஸ்.வி.சேகருக்கு பதவி கொடுக்காதது ஏன்?
தமிழக பாஜகவில் எஸ்வி சேகருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை
சென்னை: "திமுக உட்பட கடவுள் எதிர்ப்பாளர்களோ யாரோ, அவங்களுக்கு ஓட்டு போடாதீங்க" என்று மூச்சு பிடிக்க பேசிவந்தும், எஸ்வி சேகருக்கு தமிழக பாஜகவில் எந்த பொறுப்பும் தரப்படவில்லை.
தமிழக பாஜக தலைமைக்கு ஆசைப்பட்டவர்களில் சசிகலா புஷ்பாவும் ஒருவர்தான்.. அதேபோல எச்.ராஜாவும் ஆசைப்பட்டார்.. அதேபோல எஸ்வி சேகரும் ஆசைப்பட்டார்.
முருகன் தலைவராக நியமனம் செய்யப்படவும், பாஜக துணை தலைவர் பதவியாவது தருவார்கள் அல்லது பொதுச்செயலாளர் பதவியாவது கிடைக்கும் என்று சசிகலா புஷ்பாதான் அதிகமாகவே காத்து கிடந்தார்.

நிர்வாகிகள்
ஆனால், புதிய நிர்வாகிகளின் பட்டியலில் இவர்கள் யார் பெயருமே இல்லை.. இவர்களாவது பரவாயில்லை, பொன்னார் பெயரும் லிஸ்ட்டில் இல்லை.. அநேகமாக இதில் அப்செட் ஆனது எஸ்வி சேகராகத்தான் இருக்கக்கூடும்... பிரதமர் மோடி மீது அதிக பாசமும், வெறித்தனமான பக்தியையும் வைத்திருப்பவர் எஸ்வி சேகர். பாஜகவிற்கு இவர் வந்தது மோடிக்காகத்தான்... அதேபோல மோடிக்கும் எஸ்வி சேகர் மீது ஒரு பிடிப்பு இருந்து கொண்டுதான் உள்ளது.

பெண் பத்திரிகையாளர்
ஆனால், அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று ஒவ்வொரு கட்சிக்கும் தாவி சென்றுவிட்டு வந்தோமே, பெண்களை பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசி தமிழக மக்களிடம் வறுபட்டு கிடந்தோமே, கோர்ட் கேஸ் என்று படி ஏறினோமே என்றில்லாமல் திடீரென கடந்த வருடம் ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில், பாஜக தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால், அதனை ஏற்கத்தயாராக இருப்பதாக எஸ்வி சேகர் செய்தியாளர்களிடமே தெரிவித்திருந்தார்.

ஆதரவு
தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய ஓட்டு வங்கியை தன்னால் அதிகமாக்கி காட்ட முடியும் என்றும் அப்போது உறுதிபட தெரிவித்திருந்தார். இவர்தான் இப்படி சொன்னாரே தவிர, கட்சி இவரை கண்டு கொண்டது போல தெரியவில்லை.. ஆனால் இவரது பல பேச்சுக்கள் தமிழகத்தில் பரபரப்பை தந்தன.. இதோ ஒரு சாம்பிள்..

திமுக, திக
"மோடியை திட்றாங்களே அவங்களுக்கு நான் சொல்றேன், 2024-லயும் மோடிதான் இந்தியாவின் பிரதமர்.. அதுக்கு அப்புறம்? நீங்க இருக்க மாட்டீங்க அவ்வளவுதான்.. அவர் இருப்பார்! எந்த எலெக்ஷனா இருந்தாலும் சரி, வார்டு எலக்ஷனா இருந்தால் கூட, திமுகவோ, திராவிடர் கழகமோ, கடவுள் எதிர்ப்பாளர்களோ யாரோ, அவங்களுக்கு ஓட்டு போடாதீங்க.. இந்த சத்தியத்தை மட்டும் மறந்துடாதீங்க. எல்லா பிராமணனும் அறிவாளிகள்.. அதுதான் நம்ம பிரச்சனையே!" என்று பேசினார்!

பால் பாக்கெட்
"உப்புப் போட்டு சாப்பாடு சாப்பிடற பிராமணரா இருந்தால், நங்கநல்லூரில் மானமுள்ள சகோதர சகோதரிகள் யாராக இருந்தாலும்... இந்த கோலப்போட்டியில் யாருமே கலந்துக்காதீங்க" என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்துக்கு எதிராக வீடியோவை போட்டார்.. இதற்கு பிறகுதான் தன் வீட்டில் பால் பாக்கெட் கெட்டுபோனதுக்கு ட்வீட் போட்டு, அலப்பறையை ஏற்படுத்தினார்.

முருகன்
ஆனால் மோடிக்கு இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தும், பிராமணர்களுக்கு ஆதரவாக வீரியத்துடன் இவ்வளவு பேசியும்,, திக, திமுகவை வறுத்தெடுத்து ட்வீட்களை போட்டும், தமிழக பாஜக இவரை கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் சோகம்.. இந்த விஷயத்தில் முருகன் கனகச்சிதமாக காய் நகர்த்தியே பதவிகளை ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது!












Click it and Unblock the Notifications